ஒரு ஏவுகணையில் பல குண்டுகள்.. புது ஆயுதத்தை கையில் எடுத்தது ஈரான்! இஸ்ரேல் பதற்றம்
தெஹ்ரான்: அமெரிக்காவின் தாக்குதலையடுத்து, இஸ்ரேல் மீதான தனது தாக்குதலை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு முதல் முறையாக 'கைபர் மல்டி வார்ஹெட்' ஏவுகணையை பயன்படுத்தியுள்ளதாக ஈரான் அறிவித்திருக்கிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் உச்சத்தை தொட்டிருக்கிறது.
ஈரான் உருவாக்கிய அதிநவீன பாலிஸ்டிக் ஏவுகணைகளில் ஒன்றுதான் இந்த 'கைபர் மல்டி வார்ஹெட்' ஏவுகணை. ஏவுகணை உருவாக்கத்தில் இது 4ம் தலைமுறையை சேர்ந்ததாகும். பெயருக்கு (மல்டி வார்ஹெட்) ஏற்றார்போல, இது பல குண்டுகளை தன்னுள்ளே கொண்டிருக்கிறது. இதனால் ஒரு ஏவுகணை பல இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கும். அல்லது ஒரே இலக்கை அதிக பாதிப்புகளுக்கு உள்ளாக்கும்.

பல குண்டுகளை இது தனக்குள் கொண்டிருப்பதால் எதிரி நாட்டின் ஏவுகணை இடைமறிப்பு அம்சத்தை இது எளிதாக குழப்புகிறது. திட எரிபொருளில் இது இயங்குகிறது என்பது இதன் மற்றொரு சிறப்பம்சமாகும். திட எரிபொருள் இருப்பதால் இதன் வேகம் அசாத்தியமானதாக இருக்கிறது. குறிப்பாக வளிமண்டலத்திற்கு வெளியே மணிக்கு 19,500 கி.மீ.க்கு மேல் இது பறக்கும். வளிமண்டலத்திற்குள் மணிக்கு 9,800 கி.மீ.க்கு மேல் பயணிக்கும். இந்த வேகத்தில் 1,450-2,000 கி.மீ தூரத்தில் உள்ள இலக்கை இது தாக்கும்.
யோசித்து பாருங்கள் ஒலியை விட 8 மடங்கு வேகத்தில் (மணிக்கு 9,800 கி.மீ) வரும் ஏவுகணை எப்படி இருக்கும் என்று. கண்ணிமைக்கும் நேரத்தில் தாக்கி மொத்தத்தையும் அழித்துவிடும். இஸ்ரேல் வைத்திருக்கும் அயர்ன் டோம் (Iron Dome), டேவிட்ஸ் ஸ்லிங் (David's Sling) அல்லது அமெரிக்காவின் பேட்ரியாட் (Patriot) போன்ற வான் பாதுகாப்பு அம்சங்களால் கூட இதை இடைமறிக்க முடியாது. இதனை எங்கிருந்து வேண்டுமானாலும் ஏவ முடியும். எனவே எதிரியால் ஏவுகணை எங்கிருந்து வருகிறது என்பதை கணிக்க முடியாது.
மட்டுமல்லாது வெறும் 15 நிமிடங்களில் ஏவுகணையை, ஏவுதலுக்கு தயார் செய்துவிட முடியும். இந்த ஏவுகணை செயற்கைக்கொள் வழிகாட்டுதலுடன் இணைக்கப்பட்டிருப்பதால் இலக்கை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும். இந்த ஏவுகணையின் 'வார்ஹெட்', அதாவது முனைப்பகுதி 1,500 கி.கி வரை வெடிபொருளை சுமந்து செல்லும் திறன் கொண்டதாகும். மட்டுமல்லாது இது எதிரியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்தவுடன் தனது பாதையை மாற்றிக்கொள்ளும். எனவே, இடைமறிப்பது ரொம்ப கஷ்டம்.
இந்த ஏவுகணையின் ஏரோடைனமிக் வடிவமைப்பு மேம்பட்ட முறையில் இருப்பதால் காற்றில் உராய்வை குறைத்து, ரேடாரில் சிக்காமல் பயணிக்கிறது. இப்படிப்பட்ட ஏவுகணையைதான் இஸ்ரேல் மீது முதல் முறையாக ஈரான் ஏவ தொடங்கியுள்ளது. பென் குரியோன் விமான நிலையம் மற்றும் இராணுவக் கட்டுப்பாட்டு மையங்கள் உட்பட இஸ்ரேலின் முக்கிய இலக்குகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்திருக்கிறது.
இந்த ஏவுகணைகள் மொத்தம் 30 ஏவப்பட்டிருக்கிறது. இதில் வெறும் 12-ஐ மட்டுமே இஸ்ரேல் தடுத்திருக்கிறது. மீதமுள்ள 18 ஏவுகணைகள் குறிவைத்த இலக்கை வெற்றிகரமாக தாக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications