தவறுதலாக அடித்த “தீ” அலாரம்- கோலாலம்பூரில் தரையிறங்கிய மும்பை- சிங்கப்பூர் விமானம்
கோலாலம்பூர்: மும்பையிலிருந்து சிங்கப்பூர் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றின் தீவிபத்து கால அலாரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படவே அது மலேசியாவின் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாய் தரையிறக்கப்பட்டது.
மும்பையில் இருந்து இன்று சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தின் தீவிபத்து கால அலாரம் தீடீரென்று அலறியதில் அந்த விமானம் கோலாலம்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தின் சரக்கு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் கசிந்ததை அடுத்து பயணிகள் அச்சமுற்றனர்.

இன்று அதிகாலை 7.24 மணிக்கு மும்பையில் இருந்து சிங்கப்பூருக்கு இந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. மாலை 4.45 மணிக்கு அவ்விமானம் சிங்கப்பூர் சென்றடைந்திருக்க வேண்டும்.
இந்நிலையில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தின் சரக்கு பகுதியில் தீ பிடித்ததாக கிடைத்த இந்தத் தகவலையடுத்து மலேசியாவின் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஆனால், தீவிர சோதனைக்கு பின்னர் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு 20 நிமிடங்கள் தாமதமாக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் சென்ற ஊழியர்கள் உட்பட 190 பயணிகளும் நலமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தவறுதலாக அலாரம் அடித்ததற்கு காரணம் அதன் கட்டுப்பாட்டு கருவிகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளே காரணம் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications