நிலநடுக்கத்தால் சரிந்த மியான்மர் மருத்துவமனை! 1000 படுக்கைகள் இருந்துச்சே.. பலர் உயிரிழப்பு? அச்சம்
மியான்மர்: மியான்மர் நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு மிகப் பெரிய ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது அங்கு வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே மியான்மர் தலைநகர் நேபிடாவில் உள்ள 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குப் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மியான்மர் நாட்டில் இன்று காலை அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அங்குள்ள சாகிங் பகுதியில் இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. முதலில் 7.7 ரிக்டரில் பூகம்பம் ஏற்பட்ட நிலையில், பிறகுச் சற்று நேரத்தில் அங்கு 6.4 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் அங்கு வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சக்திவாய்ந்த நிலநடுக்கம்
மியான்மரில் உள்ள சாகிங் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சாகிங் என்பது மக்கள் எளிதாகச் செல்ல முடியாத ஒரு பகுதியாகும். இதனால் அங்கு எந்தளவுக்குப் பாதிப்பு மோசமாக இருக்கிறது என்பது துல்லியமாகத் தெரியவில்லை. அதேநேரம் இந்த பூகம்பம் ஒட்டுமொத்த மியான்மர் முழுக்க உணரப்பட்டுள்ளது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும் பூகம்பம் உணரப்பட்டு இருக்கிறது. இது மட்டுமின்றி இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் கூட பூகம்பம் உணரப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
மருத்துவமனையில் பாதிப்பு?
இதற்கிடையே மியான்மர் தலைநகர் நேபிடாவில் உள்ள 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை பேரழிவின் மையப் பகுதியாக உருவெடுத்து இருக்கும் என அஞ்சப்படுகிறது. அங்கு எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்த துல்லியமான தகவல்கள் இல்லை. இருப்பினும், அங்கு அதிக மக்கள் உயிரிழந்து இருக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதான் அந்த நகரத்திலேயே மிகப் பெரிய மருத்துவமனை என்றும் சொல்லப்படுகிறது.
அந்த பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளும் பதைபதைப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது. கட்டிடத்திற்கு வெளியே ஓடி வந்த மக்கள் தெருவில் வைத்து தங்கள் காயங்களுக்குச் சிகிச்சை பெற்றுள்ளனர். மியான்மர் முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது அங்குள்ள பல கட்டிடங்களைச் சேதப்படுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அங்குள்ள இராவதி ஆற்றின் மீது இருந்த பழைய பாலம் இந்த பூகம்பத்தால் இடிந்து விழுந்துள்ளது.
தாய்லாந்திலும் பாதிப்பு மோசம்
மியான்மர் மட்டுமின்றி தாய்லாந்து நாட்டிலும் பாதிப்புகள் மோசமாக இருக்கிறது. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு, வடக்கு தாய்லாந்து வரை நிலநடுக்கம் உணரப்பட்டது.. அங்கு பாங்காக்கில் சில மெட்ரோ சேவைகள் நிறுத்தப்பட்டன. பிளாட்ஃபார்மில் இருக்கும் ரயில் ஒன்று நிலநடுக்கத்தால் ஆடும் வீடியோவும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
30 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது
மேலும், தாய்லாந்தின் பாங்காக் பகுதியில் அரசு அலுவலகங்களுக்காக 30 மாடிக் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. அந்த கட்டிடம் ஒரே நொடியில் இடிந்து தரைமட்டம் ஆகியிருக்கிறது. அதன் உள்ளே 43 தொழிலாளர்கள் உள்ளே சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த போலீஸ் தலைவர் சுக்தாய் கூறுகையில், "நான் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தேன். உள்ளே பலர் சிக்கியுள்ளார்கள். அவர்கள் உதவி கேட்டுக் கதறுவது தெளிவாகக் கேட்டது. அவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications