அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்: காமெடியனா.. ஹீரோவா?
வாஷிங்டன்(யு.எஸ்): அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தல் 2016 ஆம் ஆண்டு நடக்க உள்ள நிலையில் குடியரசுக் கட்சியின் உட்கட்சி தேர்தல் சூடுபிடித்துள்ளது.
முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் தம்பியும், முன்னாள் ப்ளோரிடா கவர்னருமான ஜெப் புஷ், செனட்டர் மார்க்கோ ரூபியோ, லூசியானா கவர்னர் பாபி ஜிண்டால், நியூஜெர்ஸி கவர்னர் க்ரிஸ் க்ரிஸ்டி ஆகிய கட்சியின் ஜாம்பவான்கள் களத்தில் இருக்கும் நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக பெரும் பணக்காரர் டொனால்ட் ட்ரம்ப் அதிக ஆதரவு பெற்று முன்ணணியில் உள்ளார்.
எதிரணியான ஜனநாயகக் கட்சியில், ஒரிரு தலைவர்கள் உட்கட்சி தேர்தல் களத்தில் இருந்தாலும், கிட்டத்தட்ட போட்டியே இல்லை என்ற நிலையில் ஹிலரி க்ளிண்டன் உள்ளார். கருத்துக் கணிப்பில் குடியரசுக் கட்சி வேட்பாளர்களை விட அதிக அளவு ஆதரவு பெற்று முன்ணணியில் இருக்கிறார்.
டொனால்ட் ட்ரம்ப் குடியரசுக் கட்சி வேட்பாளர்களில் முன்ணணியில் இருப்பது பெருவாரியான குடியரசுக்கட்சியினருக்கு சற்று நெருடலாகவும், எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாததுமாகவும் இருக்கிறது. வெளியுறவு கொள்கை உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் சற்று குழப்பவாதி போல் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
மெக்சிகோ சீனா உள்ளிட்ட நாடுகளில் தனது நிறுவனங்களை நடத்தி வரும் இவர், அந்த நாடுகள்தான் அமெரிக்க பொருளாதாரத்தை சீர்குலைத்து விட்டன என்று சீரியஸாக கருத்து தெரிவித்து வருகிறார். அய்யா, உங்க கம்பெனிகளே அங்கே தானே இருக்கின்றன என்றால் 'அது வேற வாய் இது வேற வாய்' என்ற தொனியில் பதிலளிக்கிறார்.
எந்த அடிப்படையில் இவர் முன்ணணியில் உள்ளார் என்பது, அரசியல் ஆர்வலர்களுக்கு மில்லியன் டாலர் கேள்வியாகக் கூட உள்ளது.
ஒருவேளை டொனால்ட் ட்ரம்ப், குடியரசுக் கட்சியின்உட்கட்சி தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால், ஹிலரி க்ளிண்டனுக்கு சரியான போட்டியாளராக இருப்பாரா அல்லது ஹிலரிக்கு சுலபமான வெற்றியை கொடுத்துவிடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதைவிட உட்கட்சி தேர்தலில் இவர் தோற்றுவிட்டால் என்ன நடக்கும் என்ற கவலை தான் குடியரசுக் கட்சித்தலைவர்களுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது. ஏனென்றால், ட்ரம்ப் மூன்றாவது கட்சி வேட்பாளராகவோ அல்லது சுயேட்சையாகவோ போட்டியிட்டால் வாக்குகள் பிரிந்து ஹிலரியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிடும்.
இதற்கு முடிவுகட்டும் விதமாகவும், குடியரசுக் கட்சியினருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும். நான் வேறு கட்சி சார்பாகவோ, சுயேட்சையாகவோ அதிபர் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று கையெழுத்திட்டு கட்சித் தலைமைக்கு கொடுத்துள்ளார்.
குடியரசுக் கட்சியின் ஜாம்பவன்களான ஜெப் புஷ், க்ரிஸ் க்ரிஸ்டி, மார்க்கோ ரூபியோ போன்றவர்களை பின்னுக்கு தள்ளி முன்னிலையில் நிற்கும் டொனால்ட் ட்ரம்ப் ஐச் சுற்றியே தற்போதைய அமெரிக்க அரசியல் நிலை கொண்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அரசியலின் ஹீரோவா அல்லது காமெடியனா என்பது அடுத்த ஆண்டு மத்தியில் தெரிந்து விடும்.
-இர தினகர்