ஆஸ்திரியா அரசின் அந்த ஒற்றை அறிவிப்பு.. அப்படியே வீதிக்கு வந்த 44,000 பேர்..என்ன காரணம்? பரபர தகவல்
வியன்னா: ஆஸ்திரியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதை கண்டித்து அந்நாட்டு மக்கள் மாபெரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
உலகின் பல்வேறு நாடுகளிலும் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வந்தது. இந்தச் சூழலில் கடந்த நவ. 25ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டது.
அதன் பிறகு அங்கு கொரோனா கேஸ்களும் திடீரென அதிகரிக்கத் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஓமிக்ரான் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கொரோனா கவலைக்குரிய கொரோனா வகையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

உலக நாடுகள்
இந்த ஒமிக்ரான் கொரோனா டெல்டாவை விட வேகமாகப் பரவினாலும் கூட லேசான பாதிப்புகளை மட்டுமே ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இது முதற்கட்ட தரவுகள் என்பதால் வரும் காலங்களில் தான் ஓமிக்ரான் குறித்து முக்கிய தகவல்கள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓமிக்ரான் வைரசை அடுத்து உலகின் பல்வேறு நாடுகளும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

ஆஸ்திரிய அரசு
மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஆஸ்திரியாவில் 14 வயதைத் தாண்டிய அனைவருக்கும் வேக்சின் செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அங்கு வெறும் 68% மக்கள் மட்டுமே 2 டோஸ் வேக்சின் போட்டுள்ளனர். இதர ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிக மிக குறைவாகும். இதையடுத்து ஆஸ்திரியா கொரோனா வேக்சின் போடாதவர்களுக்குக் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. அதன்படி வேக்சின் போடாதவர்கள் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாபெரும் போராட்டம்
இதை ஆஸ்திரியா மக்கள் மிகக் கடுமையாக எதிர்த்துள்ளனர். வேக்சின் போட்டுக் கொள்வது ஒருவரது உரிமை என்றும் வேக்சினை கட்டாயப்படுத்துவது பாசிசம் என்றும் அந்நாட்டு மக்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். மேலும், ஆஸ்திரிய அரசின் இந்த உத்தரவைக் கண்டித்து அந்நாட்டு மக்கள் வீதிக்கு வந்துள்ளனர். அந்நாட்டு அரசைக் கண்டித்து மாபெரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்,

44 ஆயிரம் பேர்
ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 44,000க்கும் மேற்பட்டோர் திரண்டனர். வேக்சின் கட்டாயம் உள்ளிட்ட அரசின் அறிவிப்புகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள் மாபெரும் பேரணியையும் நடத்தினர். இந்த பேரணி காரணமாக வியன்னாவில் போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டது. மேலும், போராட்டத்தின் போது சில விதிமுறைகளை மீறியதாகக் கூறி 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வலதுசாரி தலைவர்
இந்த பேரணியில் அந்நாட்டின் வலதுசாரி கட்சியான ஆஸ்திரிய சுதந்திரக் கட்சியின் தலைவர் ஹெர்பர்ட் கிக்ல் பங்கேற்று உரையாற்றினார். பொதுமக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து எடுத்து வருவதாகவும் இதுபோன்ற போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். இதேபோல ஆஸ்திரியாவில் வேறு சில பகுதிகளிலும் அரசின் அறிவிப்புக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்தன.

ஐரோப்பா
ஓமிக்ரான் கண்டறிவதற்கு முன்பு ஐரோப்பாவில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. தேவையான நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் எடுக்கவில்லை என்றால் மார்ச் 2022க்குள் மேலும் 700,000 பேர் கொரோனா உயிரிழக்கலாம் என உலக சுகாதார அமைப்பும் எச்சரித்திருந்தது. 89 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஆஸ்திரியாவில் 12 லட்சம் கொரோனா கேஸ்கள் கண்டயிறப்பட்டுள்ளது. அதேபோல 13,000 பேர் உயிரிழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications