நிலநடுக்கத்தால் 10 அடி நகர்ந்தது காத்மாண்டு... ஆனால் எவரெஸ்ட் உயரத்தில் மாற்றமில்லை!
காத்மாண்டு: நேபாள நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அந்த நாட்டின் தலைநகர் காத்மாண்டு தெற்கு நோக்கி 10 அடி தூரம் நகர்ந்து போய் விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இமயத்தின் தொட்டிலாக விளங்கும் நேபாள நாட்டை சீர்குலைத்துப் போட்டுள்ளது நிலநடுக்கம். மக்கள் நிலை குலைந்து போயுள்ளனர். நாடே நாசமாகிக் கிடக்கிறது. பல புராதணச் சின்னங்கள், பழமையான கட்டடங்கள் தகர்ந்து போய் விட்டன. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேபாள நிலநடுக்கம் காரணமாக தலைநகர் காத்மாண்டு, தெற்கு நோக்கி 10 அடி தூரம் நகர்ந்துள்ளதாக புவியியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை என்றும் அது அப்படியே இருப்பதாகவும் வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
அபாயகரமான நிலநடுக்கம்
சனிக்கிழமையன்று நேபாளத்தில் 7.8 ரிக்டர் என்ற மிகக் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பேரழிவை ஏற்படுத்தி விட்டது. கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத மிகப் பெரிய நிலநடுக்கம் இது. இதில் சிக்கி 4300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல ஆயிரம் வீடுகளை இழந்துள்ளனர்.
பூகோள மாற்றம்
இந்த நிலையில் நிலநடுக்கத்தால் நேபாளத்தில் பூகோள ரீதியாக ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. அதன்படி தற்போதைய நிலநடுக்கம் காரணமாக, காத்மாண்டு நகரமானது, பூமிக்கு அடியே 10 அடி வரை தெற்கு நோக்கி நகர்ந்துள்ளதாம்.
தூக்க வைத்தது போல
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக டெக்டானிக்ஸ் நிபுணர் ஜேம்ஸ் ஜாக்சன் இத்தகவலை வெளியிட்டுள்ளார். இவரது கூற்றை அடிலைட் பல்கலைக்கழக இயற்பியல் அறிவியல் துரைத் தலைவர் சான்டி ஸ்டீஸியும் பிரதிபலித்துள்ளார். புரியும்படியாக சொல்வதானால் காத்மாண்டு நகரத்தை தூக்கி சற்று நகர்த்தி வைத்தது போன்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாம். கிட்டத்தட்ட 3 மீட்டர் தெற்கு நோக்கி தற்போது காத்மாண்டு நகரம் நகர்ந்துள்ளது.
வேறு பாதிப்பு வருமா
பூமிக்குக் கீழே 15 கிலோமீட்டர் ஆழத்தில் பூகம்பம் ஏற்பட்டதால் இந்த நகர்வு ஏற்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இதனால் காத்மாண்டு நகரம் வேறு மாதிரியான பூகோள பாதிப்புகளை சந்திக்குமா என்பது குறித்து தெளிவான தகவல் விஞ்ஞானிகளிடம் இல்லை.
எவரெஸ்ட்டில் மாற்றம் இல்லை
அதேசமயம், உலகிலேயே மிகவும் உயரமான சிகரமான எவரெஸ்ட்டின் உயரத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லையாம். அதற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் நிலஅதிர்வு காரணமாக எவரெஸ்ட்டில் சில பனிச் சிகரங்களில் பனிச் .சரிவுகள் பலமாக ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கடும் பனிச் சரிவுகள்
கடல் மட்டத்திலிருந்து 29,029 அடி உயரத்தில் எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து எவரெஸ்ட்டில் கடுமையான பனிச் சரிவுகள் ஏற்பட்டன. இதில் அடிவார முகாமில் இருந்த 18 பேர் உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.