விடாமல் துரத்தும் 'உருமாறிய' கொரோனா.. நியூசிலாந்தில் 6மாதங்களுக்கு பின் முதல் கொரோனா பலி-என்ன காரணம்
வெலிங்டன்: ஆறு மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக நியூசிலாந்தில் கொரோனா காரணமாக முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இது ஊரடங்கு கட்டுப்பாடுகள் எந்தளவு முக்கியம் என்பதை விளக்குவதாக உள்ளதாக அந்நாட்டின் பிரதமர் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கடந்த 1.5 ஆண்டுகளாகவே உலக நாடுகளில் கொரோனா தான் மிக முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அனைத்து நாடுகளும் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த திணறி வருகிறது.
சில நாடுகள் கொரோனாவை சிறப்பாகக் கட்டுப்படுத்தி வைத்திருந்தாலும், உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு அந்த நாடுகளில் மீண்டும் அதிகரிக்கிறது.

நியூசிலாந்து கொரோனா
அப்படிச் சிறப்பாக கொரோனா கட்டுக்குள் வைத்த நாடுகளில் ஒன்று நியூசிலாந்து. அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் எடுத்த சிறப்பான நடவடிக்கைகள் மூலம் நியூசிலாந்தில் விரைவாக கொரோனா கட்டுக்குள் வந்தது. இதனால் அங்கு விதிக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு, மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர். ஹோட்டல்கள், இரவு விடுதிகள், விளையாட்டுப் போட்டிகள் என அனைத்தும் வழக்கம் போலச் செயல்படத் தொடங்கியது.

மீண்டும் வைரஸ் பாதிப்பு
இந்தச் சூழலில் தான் கடந்த சில வாரங்களுக்கு முன், ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய ஒருவர் மூலம் நியூசிலாந்தில் கொரோனா பரவல் மீண்டும் ஏற்பட்டது. அப்போது உடனடியாக 3 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இருப்பினும், வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வரவில்லை. அதிலும் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய அந்த நபருக்கு டெல்டா கொரோனா இருந்தது. இதனால் நியூசிலாந்தில் கொரோனா வேகமாகப் பரவியது.

ஒருவர் உயிரிழப்பு
இந்நிலையில், சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு, முதல் முறையாக நியூசிலாந்தில் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். 90களில் இருந்த அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே, இதய நோய் இருந்துள்ளதாகவும் வென்டிலேட்டர் உதவியின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அப்பெண் வெள்ளிக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்ததாகவும் நியூசிலாந்து சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

6 மாதங்களுக்குப் பின் முதல் உயிரிழப்பு
கடந்த பிப்ரவரி 16ஆம் தேதிக்குப் பிறகு, நியூசிலாந்து நாட்டில் பதிவு செய்யப்படும் முதல் கொரோனா உயிரிழப்பு இதுவாகும். அந்த வயதான பெண்ணுக்கு வீட்டில் இருந்த மற்றொரு நபர் மூலமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள ஆக்லாந்து நகரில் தான் பெண்ணுக்கும் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு ஏற்பட்டது டெல்டா கொரோனாவா அல்லது வேறு உருமாறிய கொரோனா வகையா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ஊரடங்கு கட்டுப்பாடுகள்
நியூசிலாந்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. அதன் பிறகு மட்டும் மாநிலத்தில் 782 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக ஆக்லாந்து நகரிலேயே வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் ஆக்லாந்து நகர் முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் நாட்டின் பிற பகுதிகளில் வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளதால், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்
கொரோனா உயிரிழப்பு குறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், "இந்த உயிரிழப்பு நாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஏன் மிகவும் முக்கியமானவை என்பதைத் தெளிவாக நினைவூட்டும் வகையில் உள்ளது. நமது நாட்டில் உள்ள வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள் கொரோனாவால் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். எனவே, இவர்களைக் காக்க ஊரடங்கு என்பது முக்கியமான கருவியாகும்" என்றார்.

கொரோனா பாதிப்பு
நியூசிலாந்து நாட்டில் கடந்த வாரம் தினசரி வைரஸ் பாதிப்பு அதிகபட்சமாக 84 வரை சென்றது. அதன் பிறகு குறையத் தொடங்கிய வைரஸ் பாதிப்பு 20ஆகக் குறைந்துள்ளது. ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மூலம் வைரஸ் பரவல் சங்கிலி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார துறை அதிகாரி தெரிவித்தார்.

என்ன காரணம்
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் மூலம் வைரஸ் பாதிப்பை நியூசிலாந்து கட்டுக்குள் வைத்திருந்தது. இருப்பினும், வேக்சின் பணிகள் அங்கு மந்தமாகவே நடைபெற்று வந்தது. வளர்ந்த நாடுகளில் நியூசிலாந்து நாட்டில் தான் வேக்சின பணிகள் மிக மோசமாக இருந்தது. வைரஸ் பாதிப்பு அதிவிரைவாக உயர, மந்தமாக நடைபெற்று வந்த வேக்சின் பணிகளும் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications