நைஜீரியாவில் ‘கடவுள் இல்லை’ என்றவரை மனநல ஆஸ்பத்திரியில் சேர்த்த மக்கள்!
அபுஜா: கடவுள் நம்பிக்கை இல்லை எனக் கூறிய என்ஜினியரை மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் நைஜீரிய மக்கள்.
நைஜீரியாவின் காணு பகுதி இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதி. இப்பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருபவர் முபாரக் பலா (26) என்ற என்ஜினீயர்.
காணு பகுதி மக்கள் அதீத கடவுள் பக்தி கொண்டவர்கள். பலாவும் சிறிது காலம் முன்பு வரை தீவிர கடவுள் பக்தராகத் தான் இருந்துள்ளார். ஆனால், சமீப காலமாக அவரது நடவடிக்கையில் மாற்றம் தெரிந்துள்ளது. கடவுள் இல்லை என அனைவரிடம் கூறி வந்துள்ளார்.
இதனால், பலாவின் மனநலம் பாதிக்கப்பட்டு விட்டதாகக் கருதிய அப்பகுதி மக்கள் அவரை உடனடியாக மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பலாவை பரிசோதித்த மருத்துவர் அவர் பூரண ஆரோக்கியத்துடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த பதிலில் திருப்தியடையாத அப்பகுதி மக்கள், அவரை ஆமினு காணு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர் மனநல நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் பாலாவிற்கு பல்வேறு சோதனைகள் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே, யாருக்கும் தெரியாமல் கைபேசி வாயிலாக தனது நிலை குறித்து தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு தகவல் அளித்துள்ளார் பலா. தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்து சென்ற தொண்டு நிறுவனத்தினர் பலாவின் நிலையை வெளி உலகிற்கு தெரியப் படுத்தியுள்ளனர்.
மேலும், சட்டரீதியாக பலாவை மருத்துவமனையில் இருந்து வெளிக் கொணரும் முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.