நியூசிலாந்து சொகுசுக்கப்பலில் “காலரா” – 200 பேர் வயிற்றுப் போக்கால் அவதி!
வெல்லிங்டன், நியூசிலாந்து: நியூசிலாந்தைச் சேர்ந்த ஒரு சொகுசுக் கப்பலில் 200 பயணிகளுக்கு நோரோ வைரஸ் அதாவது காலரா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தி டான் பிரின்சஸ் என்ற அந்த சொகுசுக் கப்பலில் 1500க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இதில் 200க்கும் மேற்பட்டோருக்கு இந்த வயிற்றுப் போக்கு பரவியுள்ளதாம்.
இந்தக் கப்பல் நேற்று ஆஸ்திரேலியாவுக்குப் புறப்படுவதாக இருந்தது. கடந்த 13 நாட்களாக இது கடலில் பயணித்து வந்தது. இந்த நிலையில்தான் தற்போது வயிற்றுப் போக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
மியாமியைச் சேர்ந்த பிரின்சஸ் க்ரூய்ஸஸ் என்ற கப்பல் நிறுவனம்தான் இந்த கப்பலின் உரிமையாளர் ஆகும்.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி டாக்டர் அலிஸ்டர் ஹம்ப்ரி கூறுகையில், சுகாதாரத் துறை அதிகாரிகள் பாதிப்புக்குள்ளானோருக்கு சோதனை நடத்தியுள்ளனர். அதில் வயிற்றுப் போக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த பாதிப்பு சற்றுகுறைய ஆரம்பித்துள்ளது.
இந்த பாதிப்பால் பலருக்கு வயிற்று வலி, மூச்சுத் திணறல், வயிற்றுப் போக்கு, வாந்தி ஆகியவை ஏற்பட்டுள்ளன.
இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளோர் கப்பலில் தனியான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிரு்து மற்றவர்களுக்கு இது பரவாமல் தடுக்கும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.