தென்கொரிய அதிகாரியை சுட்டுக் கொன்று உடலை எரித்த வடகொரிய ராணுவம்.. 10 ஆண்டுகளில் முதல் சம்பவம்
சியோல்: காணாமல் போன தென்கொரிய மீன்வளத் துறை அதிகாரியை வடகொரிய ராணுவத்தினர் சுட்டுக் கொன்று அவரது உடலில் எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வடகொரியாவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையில் இருக்கும் பகுதியான கடல் எல்லை ராணுவக் கட்டுப்பாட்டின் சர்ச்சைக்குரிய பகுதியாகும். கடந்த வாரம் தென்கொரிய மீன் வள அதிகாரி ஒருவர் காணாமல் போனதாக தகவல்கள் எழுந்தன.
அந்த அதிகாரி வடகொரியாவிற்குள் நுழைய முயன்றதாக ஆதாரங்களை அந்நாட்டு ராணுவம் காட்டுவதாக தென்கொரிய ராணுவம் தெரிவிக்கிறது.

தென்கொரியா
அந்த அதிகாரி ஏன் சுட்டுக் கொல்லப்பட்டார் என தெரியவில்லை. ஆனால் வடகொரிய படைகள் கொரோனா வைரஸ் எதிர்ப்பு உத்தரவின் கீழ் செயல்பட்டிருக்கலாம் என தென்கொரியா கூறுகிறது. காணாமல் போன அந்த அதிகாரி ரோந்து படகில் அழைத்து செல்லப்பட்டார்.

உயர் அதிகாரி
பின்னர் அங்கு விசாரணை நடத்தப்பட்டு உயர் அதிகாரியின் உத்தரவின் பேரில் வடகொரிய படையினர் அவரை சுட்டுக் கொன்றதாக உளவுத் துறை ஆதாரங்களை மேற்கோள்காட்டுகிறது தென் கொரிய ராணுவம் . இதையடுத்து அவரது உடலை எண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டதாகவும் தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது.

தண்டிக்கப்பட வேண்டும்
இதுகுறித்து தென்கொரியா கூறுகையில் வடகொரியாவில் இது போன்ற கொடுமைகளை எங்கள் நாட்டு ராணுவம் வன்மையாக கண்டிக்கிறது. அதிகாரியை எரித்து கொன்றது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். அதே வேளையில் இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என தென்கொரியா அரசு தெரிவித்துள்ளது.

வடகொரிய ராணுவம்
அந்த நபர் உயிர் காக்கும் உடையை அணிந்திருந்ததாகவும் அவரது காலணிகள் தென்கொரிய படகில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் தென்கொரியா நபரை வடகொரிய ராணுவம் சுட்டுக் கொன்றது இதுவே முதல் முறையாகும்.

சுற்றுலா பயணி
கடந்த 2008 ஆம் ஆண்டு தென்கொரியாவை சேர்ந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர் வடகொரிய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் வடக்கின் மவுண்ட் கும்காங் ரிசார்ட்டில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்ததாக கூறி இந்த துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது. அதன் பின்னர் 2010-ஆம் ஆண்டு இயான்பியாங் தீவுகளில் வடகொரிய ராணுவத்தினர் குண்டுவீசியதால் இரு அப்பாவிகளும் இரு கடற்படையினரும் பலியாகினர்.












Click it and Unblock the Notifications