முன்னாள் பணியாளரை நாய் என்று அழைத்த டிரம்ப்.. ஓமரோசா சர்ச்சையில் சிக்கி பரபரப்பு
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னிடம் உதவியாளராக வேலை பார்த்த பெண்ணை நாய் என அழைத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் என்றாலே சர்ச்சை என்றாகி விட்டது. அவர் மீது புதிதாக ஒரு சர்ச்சையாய் கிளப்பி இருக்கிறார் அவருடைய முன்னாள் உதவியாளர் ஒமரோசா.
அமெரிக்க அதிபர் டிரம்பின் உதவியாளராக இருந்தவர் ஒமரோசா மனிகால்ட் நியூமேன். டிரம்ப் தன்னை நாய் என்று கூறியதாகவும் அதற்கு என்னிடம் ரகசியமாக பதிவு செய்த உரையாடல் இருக்கிறது என்றும் சமீபத்தில் பரபரப்பைக் கிளப்பினார் அவர்.
யார் இந்த ஒமரோசா
ஒமரோசா மனிகால்ட் நியூமேன் கறுப்பர் இனத்தை சார்ந்த ஆப்பிரிக்க அமெரிக்கர். இவர் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பின் உதவியாளராக பணிபுரிந்தார். கடந்த ஆண்டு அப்பணியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் "அன்ஹின்ஜெட்" என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்.
ஒமரோசா செய்த காரியம் என்ன
ஒமரோசா மனிகால்ட் நியூமேன் எழுதிய புத்தகம் ஒரு டிவி நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஒரு இன வெறியர். தான் ஒரு கறுப்பர் இனத்தை சார்ந்த ஆப்பிரிக்க அமெரிக்கர் என்பதாலே தன்னை இழிவாக பேசினார். ஒரு குற்றமும் செய்யாத என்னை வேலையில் இருந்து வெளியேற்றினர். என்னை பல முறை இழிவாக பேசினார். என்னிடம் அதற்கு ஆதாரம் உண்டு, என்று கூறியுள்ளார்.
சர்ச்சை கிளப்பிய ஆதாரம்
டிரம்ப் தன்னை இழிவாக பேசிய உரையாடலை ஒமரோசா அந்த நிகழ்ச்சியிலேயே வெளியிட்டார். அந்த உரையாடல் பதிவு, அவரும் டிரம்பும் உரையாடுவதாக அமைந்து உள்ளது. மேலும் அந்த தொலைபேசி உரையாடல், அமெரிக்காவில் என்.பி.சி. தொலைக்காட்சியில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உரையாடலில் இருந்தது என்ன
அந்த உரையாடலில் டிரம்ப், ஆச்சரியத்துடன், "நீங்கள் பணியில் இருந்து விலகுவதாக தொலைக்காட்சியில் பார்த்தேன். என்ன நடந்து கொண்டிருக்கிறது?" என்று கேட்கிறார். அதற்கு ஒமரோசா, " ஜெனரல் கெல்லி என்னிடம் வந்து, நான் பணியில் இருந்து விலக வேண்டும் என்று விரும்புவதாக கூறினார் " என்று பதில் அளித்தார். உடனே டிரம்பின் குரல் என நம்பப்படுகிற அந்தக் குரல், "இல்லை... எனக்கு இதை பற்றி ஒன்றும் தெரியாது, என்னிடம் யாரும் எதும் கூறவில்லை. நீங்கள் பணியில் இருந்து செல்வதை நான் விரும்பவில்லை" என்று கூறுகிறது. இப்படியாக அந்த உரையாடல் நீளுகிறது. இந்த தொலைபேசி உரையாடல், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய டிரம்ப்
அந்த உரையாடல் குறித்து டிரம்ப் தான் ட்விட்டரில் பக்கத்தில் எழுதியுள்ளார். அதில் ஒமரோசாவை டிரம்ப் நாய் என கூறியது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், 'கஷ்டப்படும் பைத்தியக்கார பெண்ணுக்கு நன்மை செய்ய நினைத்து வெள்ளை மாளிகையில் வேலை அளித்தால் அது சரியாக அமையவில்லை. அந்த நாயை வேலையை விட்டு துரத்தியது நல்ல செயல் ஜான் கெல்லி (வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி).' என அவர் பதிவிட்டுள்ளார். கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள டிரம்பின் இந்த பதிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஒமரோசா, தனக்கு கிடைக்கும் ஒவ்வொறு வாய்ப்பிலும் கருப்பினத்தவரை இழிவு படுத்துவதே டிரம்பிற்கு வழக்கமாக உள்ளது. இந்த விவகாரத்தை வைத்து இனவெறி போரை தூண்ட முயற்சிக்கிறார் என தெரிவித்துள்ளார். மேலும், அவரது கருத்தை திரும்ப பெற வேண்டும் எனவும் என பலரும் ட்ரம்பிற்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.