கதறி துடித்த குழந்தை.. பதறி தவித்த தாய்மை.. நெகிழ்ச்சி தருணத்தின் சம்பவம்
புயனஸ் ஏரிஸ்: தாய்ப்பால்... அது உயிர்ப்பால்!
எந்த பொருட்களிலும் இல்லாத ஒரு சக்தி இந்த தாய்ப்பாலுக்குத்தான் உண்டு. பெற்ற குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தால், இல்லாத அழகு கூட கெட்டுவிடுவதாக சில இளம் பெண்கள் நினைத்து கொண்டிருக்கிறார்கள். அதனால் பச்சிளம் குழந்தைகள் பசியால் கதறி அழுதாலும் தாய்ப்பால் தர மறுக்கும் சில பெண்களும் உண்டு.
ஆனால் இதெல்லாம் நம்ம ஊர்லதான் எடுபடும். வெளிநாட்டில் அதாவது அர்ஜெண்டினாவில் ஒரு சம்பவம் நடந்திருக்கு. தலைநகர் புயனஸ் ஏரிஸ்ஸில் அருகே உள்ள பகுதி பெரிசோ. இங்கு செலஸ்டி ஜாக்குலின் அயலா என்ற பெண் வசித்து வருகிறார். இவர் ஒரு போலீஸ். இவருக்கு கொஞ்ச நாள் முன்பு ஒரு குழந்தை பிறந்துள்ளது.
ரோந்து பணி
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி ஜாக்குலின் வழக்கம்போல் பணிக்கு சென்றார். அன்றைய தினம், அவருக்கு குழந்தைகள் மருத்துவமனையில் பாதுகாப்பு ரோந்து பணி கொடுக்கப்பட்டது. கூடவே சக போலீசாரும் அந்த குழந்தைகள் மருத்துவமனைக்கு ரோந்து பணியில் ஈடுபட சென்றனர்.
தவித்த ஜாக்குலின்
அப்போது, மருத்துவமனையில் திடீரென ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. தாயைப் பிரிந்த குழந்தை ஒன்று பசியால் கதறி கொண்டிருந்தது. அந்த குழந்தையின் தாய் அந்த நேரம் பார்த்து எங்கு போனாளோ தெரியவில்லை. பசியால் குழந்தை அழுவதை பார்த்ததும் ஜாக்குலினுக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. உடம்பெல்லாம் என்னவோ செய்தது. வந்ததோ ரோந்து பணிக்கு, அதையும் பார்க்க முடியவில்லை. குழந்தை அழுவதை கண்டுக்காமலும் இருக்க முடியவில்லை. தவித்து கொண்டே இருந்தார்.
பசியாற்றிய ஜாக்குலின்
ஒரு கட்டத்தில் அவரால் முடியவில்லை... ஓடிச்சென்று ஜாக்குலின் அந்த குழந்தையை தூக்கி வைத்து கொண்டு தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். இதனை சக போலீசார் மட்டுமில்லை, அந்த மருத்துவமனையில் இருந்த மற்ற தாய்மார்கள் உட்பட அனைவருமே மெய்சிலிர்த்து பார்த்தார்கள். கொஞ்ச நேரத்தில் குழந்தையின் அழுகை நின்றது... பசியும் தீர்ந்தது... இப்போது ஜாக்குலினை கண்டு குழந்தை சிரித்தது.
ஒரேநாளில் பேசப்பட்டார்
ஜாக்குலின் தாய்ப்பால் கொடுத்ததை அவருடன் பணிபுரியும் நண்பர் மேக்ரோஸ் ஹெரிடியா என்பவர் போட்டோ எடுத்து தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதன் வீரியம் என்ன தெரியுமா? அந்த போட்டோ 1 லட்சத்து 12 ஆயிரம் பேர்களால் ஷேர் செய்யப்பட்டுள்ளது. இதனால், ஜாக்குலின் ஒரே நாளில் அர்ஜெண்டினா முழுவதும் பேசப்பட்டார்.
இதுதான் தாய்மை
இது இல்லாமல், அன்றைய தினம், அர்ஜெண்டினாவில் தேசிய பெண் அலுவலர்கள் தினமாம். இனி கேட்க வேண்டுமா என்ன? அர்ஜெண்டினா அரசு ஜாக்குலினுக்கு பதவி உயர்வும் அளித்துள்ளது. ஒரு குழந்தை எதற்காக அழும், எதற்காக சிரிக்கும் என்பதை உணர்பவளே தாய். அந்த தாய் போலீசாக இருந்தால் என்ன? யாராக இருந்தால் என்ன? உலக உருண்டையில் கலந்துவிட்ட 'தாய்மை'யானது, வேலை, கடமை, பொறுப்பு, இடம், இடைஞ்சல் என இருந்தாலும் அனைத்தையுமே புரட்டி போட்டுவிட்டு தன் தளத்தில் உறுதியுடன் தொடர்ந்து பயணித்து கொண்டே இருக்கும் என்பதற்கு ஜாக்குலின் ஒரு எடுத்துக்காட்டு!