பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ஒருவர் பலி… 30 பேர் படுகாயம்
நவாப்ஷா மாவட்டத்தில் வடகிழக்கு பகுதியில் 27 கிமீட்டர் தூரத்தில் 15 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் கட்டடங்கள் குலுங்கின. ஒரு கட்டிடத்தின் கூரை இடிந்து விழுந்தது. இதில் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதில் ஒருவர் இடிபாட்டில் சிக்கி உயிரிழந்தார். குறைந்தது 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மீட்பு குழுவினர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த நிலநடுக்கத்திற்கு 100க்கும் மேற்பட்ட வீடுகளும், கட்டிடங்களும் சேதமடைந்துள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல் அருகில் உள்ள தவுர் பகுதியில் இன்று அதிகாலை 3.50 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து ஒரு மணி நேரத்தில் மீண்டும் மற்றொரு நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் குலுங்கின. தூங்கி கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சியில் எழுந்து வெளியே ஓட்டம் பிடித்தனர்.
நிலநடுக்கம் காரணமாக தவுர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டன. இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன.
பாகிஸ்தானில் கடந்த 2005ம் ஆண்டு அக்டோபர் 8ம்தேதி 7.6 ரிக்டெர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 73000 பேர் பலியாகினர். 35 லட்சம் மக்கள் வீடுகளையும், உடமைகளையும் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.