சுற்றி வளைக்கப்பட்ட காபுல்.. ஜலாலாபாத்தையும் கைப்பற்றியது தாலிபான்.. வேகமாக வீழ்கிறது ஆப்கான் படை!
காபுல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான் படைகள் வேகமாக முன்னேறி வருகிறது. அங்கு தாலிபான்கள் படைகள் தற்போது ஜலாலாபாத் என்ற முக்கியமான நகரத்தையும் கைப்பற்றி உள்ளது.
Recommended Video
20 வருடத்திற்கு பின்.. அமெரிக்காவின் மிக நீண்ட போருக்கு பின்.. எந்த மாற்றமும் இன்றி.. எங்கே தொடங்கியதோ அங்கேயே மீண்டும் ஆப்கானிஸ்தான் வந்து நிற்கிறது. 20 வருடங்களுக்கு முன் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்து தாலிபான்களை வீழ்த்தியதற்கு முன் என்ன நிலைமை இருந்ததோ அதே சூழ்நிலை தற்போது ஆப்கானிஸ்தானில் திரும்பி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான் படைகள் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 95 சதவிகித கிராமங்களை தாலிபான்கள் தற்போது கைப்பற்றிவிட்டது. ஆப்கானிஸ்தானில் உள்ள 421 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 400 மாவட்டங்கள் வரை தாலிபான்கள் வசம் சென்றுவிட்டது. இதனால் தாலிபான்களின் வெற்றி ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

பதவி விலகல்
ஆப்கானிஸ்தானில் தாலிபான் படைகள் வெற்றிபெற்று வரும் நிலையில் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கானி பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. ஒரு பக்கம் அஷ்ரப் கானி பதவி விலக வேண்டும், அவர் ஆட்சியில் நீடிக்க கூடாது. அவர் ஆட்சியில் இருக்கும் போது பேச்சுவார்த்தை என்ற வார்த்தைக்கே இடம் இல்லை என்று தாலிபான் படைகள் வெளிப்படையாக அறிவித்துவிட்டது. அஷ்ரப் கானி துரோகி, அவரை ஆட்சியில் இருந்து அகற்றாமல் நாங்கள் இந்த மோதலை முடிவிற்கு கொண்டு வர மாட்டோம். காபுலை கைப்பற்றும் வரை பேச்சுவார்த்தை என்ற வார்த்தைக்கே இடம் கிடையாது என்று அஷ்ரப் கானிக்கு எதிராக தாலிபான்கள் வெளிப்படையாக அறிவித்துள்ளது.

அஷ்ரப் கானி
ஆனால் தோல்விக்கு மிக அருகில் சென்றுவிட்டாலும் அஷ்ரப் கானி தோல்வியை ஒப்புக்கொள்வதாக இல்லை. தாலிபான்களிடம் நாட்டை கொடுக்க முடியாது. படைகளை இடமாற்றுவதே எங்களின் நோக்கம். ஆப்கானிஸ்தான் மிக மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. இந்த போரை உடனடியாக தாலிபான்கள் நிறுத்த வேண்டும். அமைதிக்கு வழி ஏற்படுத்த வேண்டும். உலக நாடுகள் ஆப்கான் படைகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று நேற்று மக்கள் முன்னிலையில் பேசினார். ஆனால் தாலிபான் படைகள் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் எந்த கவலையும் இன்றி வேகமாக முன்னேறி வருகிறது.

முன்னேற்றம்
ஆப்கானிஸ்தானில் முக்கியமாக மாகாண தலைநகரங்கள், எல்லை பகுதிகள், விமான நிலையங்கள், தூதரங்கள், அதிகமான மாவட்டங்கள் தற்போது தாலிபான்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. காபூலில் சில முக்கிய பகுதிகள், இஸ்லாம் குவாலா, அபு நாசர் பராஹீ போர்ட், தோர்குந்தி, சராஞ் போன்ற எல்லையோர பகுதிகள் தாலிபான்கள் வசம் சென்றுவிட்டது. இதுபோக கந்தகார், மஸார் இ ஷெரிப் போன்ற முக்கிய நகரங்களில் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டது. இதனால் நேற்று நிலவரப்படி காபுல், ஜலாலாபாத் மட்டுமே ஆப்கான் அரசு கட்டுப்பாட்டில் இருந்தது.

கைப்பற்றியது
இந்த நிலையில்தான் இன்று ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரத்தை தாலிபான் கைப்பற்றியது. ஆப்கான் படைகளின் எந்த எதிர்ப்பும் இல்லாமல் எளிதாக தாலிபான் படைகள் ஜலாலாபாத்தை கைப்பற்றியது. இதன் மூலம் காபுல் தவிர அனைத்து முக்கிய நகரங்களும் தாலிபான் வசம் வந்துள்ளது. இன்று அதிகாலைதான் ஜலாலாபாத் நகரத்திற்குள் தாலிபான்கள் நுழைந்தது. இது காபுலுக்கு மிக அருகில் இருக்கும் நகரம் ஆகும். இதனால் இங்கு கடுமையான மோதல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஜலாலாபாத்
ஆனால் இங்கே உள்ளே தாலிபான்கள் படைகள் நுழைந்தவுடன் ஆப்கான் படைகளுக்கும் தாலிபான்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்பகுதி கவர்னர் மூலமும், மூத்த தலைவர்கள் மூலமும் இந்த பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மோதல் வேண்டாம் என்று கவர்னர் உள்ளிட்ட தலைவர்கள் கோரிக்கை வைத்தனர். இதன் முடிவில் தாலிபான் படைகளிடம் ஆப்கான் படைகள் சரண்டர் ஆனது. ஒரு சின்ன துப்பாக்கி சத்தம் கூட இல்லாமல் ஜலாலாபாத் நகரத்தை தாலிபான்கள் கட்டுக்குள் கொண்டு வந்தது.

நகர்கார்
ஆப்கானிஸ்தானின் முக்கியமான மாகாணங்களில் ஒன்று நகர்கார். இந்த மாகாணத்தின் தலைநகர்தான் ஜலாலாபாத். இது பொருளாதார ரீதியாக மிகவும் முன்னேறிய நகரங்களில் ஒன்று. அதோடு காபுல் பாகிஸ்தான் இடையில் இருக்கும் நகரம் இதுதான். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தையும் ஆப்கானிஸ்தான் தலைவர் காபுலையும் இணைக்கும் சாலை ஜலாலாபாத் வழியேதான் அமைக்கப்பட்டுள்ளது. காபுலுக்கு கிழக்கே இந்த ஜலாலாபாத் அமைந்துள்ளது. தற்போது இந்த நகரத்தை தாலிபான்கள் கைப்பற்றி உள்ளது.

தொடர்பு துண்டிக்கப்பட்டது
இதனால் காபுல் இஸ்லாமாபாத் இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் தாலிபான்கள் தற்போது ஆப்கானிஸ்தானில் கந்தகார், மாஸார் இ ஷெரிப், ஹராத், ஜலாலாபாத் ஆகிய நகரங்களை கைப்பற்றிவிட்டது. இதன் மூலம் காபுல் தவிர அனைத்து மாகாண தலைநகரங்களும் தாலிபான் வசம் வந்துவிட்டது. காபுல் மட்டுமே தற்போது ஆப்கான் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த காபுல் நகரம் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் தாலிபான்கள் வசம் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாய்ப்பு
இப்போது ஜலாலாபாத் வீழ்ந்துவிட்டதால் அடுத்து காபுல்தான் என்பது உறுதியாகி உள்ளது. இதனால் அங்கிருந்து அதிபர் அஷ்ரப் கானி வெளியேறும் வாய்ப்புகள் உள்ளன. அவர் மொத்தமாக குடும்பத்தோடு நாட்டை விட்டு வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்கா அல்லது அமெரிக்காவின் நட்பு நாடுகளில் அவர் குடியேறும் வாய்ப்புகள் உள்ளன. அடுத்த 7 நாட்களுக்குள் மொத்தமாக ஆப்கானிஸ்தான் தாலிபான் வசம் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications