என்னது பாகிஸ்தானுக்கு ஆதரவா? துருக்கியின் அடிமடியிலேயே கைவைத்த இந்திய நிறுவனம்! தரமான சம்பவம்
டெல்லி: பயங்கரவாதத்துக்கு உதவி செய்து வரும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடியை நம் நாடு வழங்கி வருகிறது. இப்படியான சூழலில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி, அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகள் கைகோர்த்துள்ள நிலையில் இருநாடுகளுக்கும் நம் நாட்டை சேர்ந்த நிறுவனம் ‛செக்' வைத்துள்ளது.
நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டு வருகிறது. பாகிஸ்தானின் ஏவுகணை, ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்களை நம் படை வீரர்கள் சுட்டு வீழ்த்தி வருகின்றனர். அதேபோல் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் எல்லைகளில் ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி பாகிஸ்தான் ராணுவம் நடத்தும் தாக்குதலுக்கு உரிய பதிலடியை நம் படை வீரர்கள் கொடுத்து வருகின்றனர். அதேபோல் விமானப்படை, கப்பற்படை முழுவீச்சில் பாகிஸ்தானை அட்டாக் செய்து வருகிறது. ஏவுகணை தாக்குதல்கள் விமானப்படை, கப்பற்படை மூலம் பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் கதிகலங்கியுள்ளது.
சுற்றுலா நிறுவனம்
பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஆதரிப்பது தெரிந்தும் கூட துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகள் அந்த நாட்டுக்கு ஆதரவாக நிற்கின்றன. அதோடு பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நம் நாடு தாக்கியதை கண்டித்துள்ளனர். இதனால் இருநாடுகளையும் நம் மக்கள் வலைதளங்களில் விளாசி வருகின்றனர். இந்நிலையில் தான் துருக்கி மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகளுக்கான சுற்றுலா திட்டத்தை சுருக்கி கொள்வதாக EaseMyTrip நிறுவனம் அறிவித்துள்ளது.
EaseMyTrip நிறுவன தலைவர்
இந்த நிறுவனம் டெல்லியை தலைமையிடமாக கொண்டு 2008 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. நிஷாந்த் பிட்டி , ரிகாந்த் பிட்டி மற்றும் பிரசாந்த் பிட்டி ஆகியோர் இந்த நிறுவனத்தை தொடங்கினர். ஆன்லைன் மூலமாக வெளிநாடு சுற்றுலா செல்லும் சேவையை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது.
அதாவது வெளிநாடுகளில் ஹோட்டல் முன்பதிவுகள், விமான டிக்கெட்டுகள் , உள்நாட்டு மற்றும் சர்வதேச விடுமுறை பேக்கேஜ் டிரிப்புகள் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் நம் நாட்டில் மட்டுமின்றி சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தாய்லாந்திலும் நிறுவனங்களை வைத்துள்ளது. இந்நிலையில் தான் EaseMyTrip நிறுவனத்தின் நிறுவனரும், தலைவருமான நிசாந்த் பிட்டி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பயணத்தை கட்டுப்படுத்த அறிவுரை
அதில், ‛‛ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் போன்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இப்படியான சூழலில் துருக்கியும் அஜர்பைஜானும் பாகிஸ்தானுக்கு தங்கள் ஆதரவை வழங்கியுள்ளன. இது வருத்தமளிக்கிறது. இதனால் மிகவும் துருக்கி மற்றும் அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகளுக்கு மிகவும் அவசியமான பயணத்தை தவிர மற்ற பயணங்களை மக்கள் கட்டுப்படுத்த வேண்டும்.
ஏனென்றால் பயணிகளின் பாதுகாப்பு தான் எங்களுக்கு முக்கியத்துவம். இதனால் எங்களின் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சென்சிட்டிவான பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று நாங்கள் அறிவுறுத்துகிறோம்'' என தெரிவித்துள்ளார். இதன்மூலம் துருக்கிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
துருக்கியை எப்படி பாதிக்கும்?
ஏனென்றால் துருக்கி என்பது சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற நாடாக உள்ளது. மேலும் நம் நாட்டில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். கடந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமான இந்தியர்கள் துருக்கிக்கு சுற்றுலா சென்னறர். அதாவது கடந்த 2024ம் ஆண்டில் துருக்கியின் சுற்றுலா வருமானம் என்பது 61.1 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது அதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 8.3 சதவீதம் அதிகமாகும்.
குறிப்பாக துருக்கி செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை என்பது கிடுகிடுவென அதிகரித்தது. அதாவது 2023ம் ஆண்டை ஒப்பிடும்போது 2024 ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து துருக்கி சென்றோரின் எண்ணிக்கை என்பது 20.7 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் நம் நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து துருக்கிக்கு நேரடியாக விமான வசதி ஏற்படுத்தி கொடுத்தது தான். இந்நிலையில் தான் தற்போது பலரும் துருக்கிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். அந்த வகையில் EaseMyTrip நிறுவனமும் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு துருக்கி செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளது. இது துருக்கியின் சுற்றுலா வருமானத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும்.
பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி சொன்னது என்ன?
முன்னதாக நேற்று முன்தினம் நள்ளிரவில் நம் நாடு பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. அதன்பிறகு துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் ஹக்கன் பிடன், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அதன்பிறகு பாகிஸ்தானுக்கான துருக்கி தூதர் நேரில் இஷாக் தாரை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதோடு இந்தியாவின் தாக்குதலை கண்டித்தார்.
அஜர்பைஜான் சொன்னது என்ன?
அதேபோல் துருக்கியுடன் நெருக்கம் காட்டி வரும் இன்னொரு இஸ்லாமிய நாடான அஜர்பைஜானும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தது. ‛‛இஸ்லாமிக் சுதந்திர நாடான பாகிஸ்தான் மீதான ராணுவ தாக்குதல் என்பது பொதுமக்களை கொன்றுள்ளது. பலரும் காயமடைந்துள்ளனர். இதனை நாங்கள் கண்டிக்கிறோம். இந்த நேரத்தில் பாகிஸ்தான் மக்களுடன் நின்று இறந்த அப்பாவிக்களின் மக்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறோம். அதேபோல் காயமடைந்தவர்கள் விரைந்து குணமாக வாழ்த்துகள் தெரிவிக்கிறோம்.
இந்த விஷயத்தில் அனைத்து தரப்பினரும் நிதானத்தை கடைப்பிடிக்கவும், தூதரக முறையிலான பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரவும் நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்'' என்று இந்தியாவை விமர்சனம் செய்து இருந்த நிலையில் தான் EaseMyTrip நிறுவனம் இருநாடுகளுக்கும் பயணிகள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுரை வழங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications