பாஜகவை வீழ்த்த வலிமையான எதிர்க்கட்சிகள் கூட்டணி அமையும்- ஆச்சரியங்கள் நிகழும்: ராகுல் நம்பிக்கை!
நியூயார்க்: லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகளின் வலிமையான கூட்டணி அமையும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, பிரதமர் மோடி- மத்திய அரசு, மத்தியில் ஆளும் பாஜக, அதனை இயக்கும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஆகியவை தொடர்பான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இதற்கு பாஜகவும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

அமெரிக்கா பயணம் மேற்கொண்டிருக்கும் ராகுல் காந்தி ஏ.என்.ஐ.செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி: முஸ்லிம் லீக் என்பது முழுமையாக ஒரு மதச்சார்பற்ற கட்சி. முஸ்லிம் லீக் வரலாறைப் படித்தவர்கள், மதச்சார்பு தொடர்பான கேள்வியை கேட்க மாட்டார்கள். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையாக இருக்கிறோம். முன்பைவிட இன்னமும் வலிமையாக இணைந்து நிற்கிறோம். எதிர்க்கட்சிகளிடையே நல்ல உரையாடல் போக்கு இருக்கிறது. பாஜகவுக்கு எதிராக வலிமையான எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமையும் என்பதில் நம்பிக்கையாக இருக்கிறேன். பாஜகவை வீழ்த்த இன்னமும் வலிமையான கூட்டணி தேவை. பாஜகவை வீழ்த்துவதற்கு தெளிவான செயல் திட்டம் தேவை. பாஜகவுடன் போராடுவது என்பது தொடரவே செய்யும். லோக்சபா தேர்தலில் ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜகவை எதிர்த்து காங்கிரஸ் போட்டியிட்டது. பாரத் ஜோடோ யாத்திரையில் கிடைத்த அனுபவங்களின் , பாடங்களின் அடிப்படையில் கர்நாடகா தேர்தலை எதிர்கொண்டோம்.
இந்திய விடுதலைக்குப் பின் அவதூறு வழக்கு ஒன்றில் முதல் முறையே 2 ஆண்டு சிறை என தண்டனை விதிக்கப்பட்டது எனக்காகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். முதல் முறை குற்றத்துக்காக இதுவரை யாருக்கும் இப்படியான அதிகபட்ச தண்டனை கொடுத்தது இல்லை. நாடாளுமன்றத்தில் அதானி குறித்து பேசியதைத் தொடர்ந்தே இந்த விளையாட்டுகள் தொடங்கின. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
லோக்சபா தேர்தலுக்கு வலிமையான எதிர்க்கட்சிகளின் கூட்டணி தேவை என ராகுல் வலியுறுத்தி இருக்கிறார். இதனால் நிதிஷ்குமார் முன்னெடுக்கக் கூடிய எதிர்க்கட்சிகளின் சங்கமம் நிகழ்வுக்கு காங்கிரஸ் தரப்பு எந்த இடையூறும் செய்யாமல் இருக்கக் கூடிய சாத்தியங்கள் உள்ளன என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications