சொந்த நாட்டு மக்களையே தவிக்கவிட்ட பாகிஸ்தான்.. வாகா எல்லை திடீரென மூடல்.. கண்ணீர்விடும் பொதுமக்கள்
இஸ்லாமாபாத்: இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், திடீரென பாகிஸ்தான் தனது வாகா எல்லையை மூடிவிட்டது. இதனால் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் திரும்ப முடியாமல் அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் அவதியடைந்துள்ளனர். பாகிஸ்தான் தனது சொந்த நாட்டு மக்களையே அட்டாரி- வாகா எல்லையில் தவிக்க விட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியர்கள் இரண்டு நாட்களில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என இந்தியா உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், குறுகிய கால அவகாசம் மட்டுமே இருந்ததால் அனைத்துப் பாகிஸ்தானியர்களாலும் வெளியேற முடியவில்லை.

எல்லைகள் மூடல்
இதனால் இந்தியாவில் இருந்த பாகிஸ்தானியர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், பாகிஸ்தான் நாட்டினர் முறையான ஆவணங்களுடன் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீடித்திருந்தது. அதாவது முன்பு ஏப்ரல் 30ம் தேதி எல்லையை மூடப்படும் என இந்தியா அறிவித்திருந்தது. இருப்பினும், தற்போது மறு அறிவிப்பு வரும் வரை பாகிஸ்தான் நாட்டினர் சொந்த நாடு திரும்பி வர அனுமதித்தது.
இந்தியா மனிதாபிமான நடவடிக்கை
மனிதாபிமான அடிப்படையில் இந்தியா இந்த முடிவை எடுத்திருந்தது. ஆனால், தனது சொந்த நாட்டினர் பற்றியே கவலைப்படாமல் அட்டாரி-வாகா எல்லையை பாகிஸ்தான் இன்று திடீரென முழுமையாக மூடியது. இப்படி பாகிஸ்தான் திடீரெனத் தனது எல்லையை மூடியதால் பாகிஸ்தானில் உள்ள இந்தியர்களால் தாயகம் திரும்ப முடியவில்லை. மேலும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களாலும் அங்குச் செல்ல முடியவில்லை. பாகிஸ்தான் தனது சொந்த நாட்டினரையே தவிக்க விட்டுள்ளது.
அப்படித் தான் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்குத் திருமணம் செய்து தரப்பட்ட இரு இந்தியச் சகோதரிகள் எல்லையைக் கடக்க முற்பட்டனர். இருப்பினும், பாகிஸ்தான் தனது வாகா எல்லையை மூடிவிட்டதால் அவர்களால் பாகிஸ்தான் செல்ல முடியவில்லை.
சகோதரிகள் கண்ணீர்
இது தொடர்பாக அந்தச் சகோதரிகள், "தயவுசெய்து எல்லையைக் கடக்க அனுமதிக்கச் சொல்லுங்கள். நான் எங்கள் குழந்தைகளிடம் செல்ல வேண்டும். என்னுடைய குழந்தைகள் அங்கே இருக்கிறார்கள். பெற்றோரைக் குழந்தைகள் பிரிய வேண்டும் என எந்தச் சட்டம் சொல்கிறது. எனது குழந்தைகள் அங்கு அழுது கொண்டு இருக்கிறார்கள். நான் அங்கே செல்ல வேண்டும்" என்று கண்ணீருடன் அந்தச் சகோதரிகள் கூறுகிறார்கள்.
அதேபோல பாகிஸ்தானை சேர்ந்த பலரும் காலை முதலே எல்லையைக் கடக்கக் காத்திருக்கிறார்கள். இருப்பினும், பாகிஸ்தான் தனது சொந்த நாட்டு மக்களையே உள்ளே விடாமல் தவிக்கவிட்டுள்ளது.
அனுமதிக்கவில்லை
இது தொடர்பாகத் தனது தங்கையை பாகிஸ்தானுக்கு அனுப்ப வந்த முகமது ஷாரிக் கூறுகையில், "நான் என் சகோதரிகளுடன் காலை 6 மணிக்கு இங்கு வந்தேன். காலை 10 மணிக்கு எல்லை திறக்கப்பட்டது. ஆனால், யாரையும் அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக நாங்கள் அதிகாரிகளிடம் கேட்டோம். அவர்கள் இங்கிருந்து அனுப்பத் தயாராக இருந்தனர். ஆனால், பாகிஸ்தான் எங்களை அனுமதிக்கவில்லை. இன்னும் எவ்வளவே நேரம் காத்திருக்க வேண்டும் எனத் தெரியவில்லை" எனக் கூறியிருந்தார்.
இவர்கள் மட்டுமில்லை. எல்லையில் இன்னும் பல பாகிஸ்தானியர்கள் இப்படித் தான் தவித்து வருகிறார்கள். தனது நாட்டினர் எல்லையில் தவிக்கிறார்கள் என்பது தெரிந்தும் கூட எல்லையைத் திறக்க பாகிஸ்தான் மறுத்து வருகிறது. இதனால் பாகிஸ்தானைச் செய்தவர்கள் செய்வதறியாமல் எல்லையில் சிரமப்பட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications