ஆப்கானை கோழைத்தனமாக தாக்கிய பாகிஸ்தான்? நடுவில் வந்த கத்தார்! அதிகரிக்கும் பதற்றம்.. அடுத்து என்ன
காபூல்: ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக மோதல் போக்கு நிலவி வந்தன. இரு நாடுகளும் மாறி மாறி தாக்கிக் கொண்ட சூழலில், நிலைமை மோசமானது. இதனால் போர் வெடிக்கும் சூழல் உருவானது. இந்தச் சூழலில் தான் கத்தார் இதில் நேரடியாகத் தலையிட்டது. கத்தார் உள்ளே வந்த பிறகு என்ன நடந்தது.. இப்போது இரு நாடுகளும் என்ன முடிவு செய்துள்ளது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பாகிஸ்தான் தன்னை சுற்றி இருக்கும் நாடுகளுடன் தொடர்ந்து மோதல் போக்கையே கையாண்டு வருகிறது. ஆப்கானிஸ்தானும் கூட பாகிஸ்தானின் அத்துமீறலில் இருந்து தப்பவில்லை. இதனால் ஆப்கான்- பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வந்தது. இரு தரப்பும் மாறி மாறி தாக்கிக் கொண்டன.

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான்
குறிப்பாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அங்கு டிடிபி என்று அழைக்கப்படும் பாகிஸ்தான் தாலிபான்கள் இருப்பதாகச் சொல்லி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதுவே பிரச்சினைக்கு முக்கிய காரணம். இதைத் தொடர்ந்து ஆப்கானின் தாலிபான் அரசு பாகிஸ்தான் மீது பதிலடி கொடுத்தது.
இரு நாட்டு எல்லைக்கு அருகே உள்ள செக்யூரிட்டி போஸ்ட்களை தாலிபான் படைகள் அழிக்க ஆரம்பித்து. தாலிபான்கள் நடத்திய இந்த கொடூர தாக்குதலில் சுமார் 55க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்தனர். இதையடுத்து இரு நாடுகளும் தற்காலிகமாக 48 மணி நேரம் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன.
கோழைத்தனமாகத் தாக்குதல்
ஆனால், போர் நிறுத்தம் இருந்தபோதே ஆப்கான் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதலை நடத்தியது. இதில் ஆப்கான் நாட்டை சேர்ந்த 3 கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிக்காகச் சென்ற ஆப்கான் வீரர்கள் எல்லையிலேயே கொல்லப்பட்டுள்ளனர். போர் நிறுத்தம் இருக்கும்போதே பாகிஸ்தானின் இந்த கொடூர தாக்குதலை பல்வேறு தரப்பினரும் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.
இப்படி இரு தரப்பும் மாறி மாறி தாக்கிக் கொண்டால் போர் வெடிக்கும் என அஞ்சப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரத்தில் தலையிட்ட கத்தார், இரு தரப்பிற்கும் மத்தியஸ்தம் செய்து போர் நிறுத்தம் கொண்டு வர முயன்றது. தீவிர முயற்சிக்குப் பிறகு இப்போது போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளே வந்த கத்தார்
கத்தாரில் உள்ள தோஹாவில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தைகளுக்குத் துருக்கியும் மத்தியஸ்தம் செய்தது. ஒரு வாரக் கால தீவிர எல்லை மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே இதன் நோக்கமாகும்.
அடுத்து என்ன
இது தொடர்பாக கத்தார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "போர் நிறுத்தம் நீடிப்பது மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க வரும் நாட்களில் அடுத்தடுத்து சந்திப்புகள் நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சந்திப்பில் ஆப்கன் சார்பில் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் முல்லா முஹம்மது யாகூப் இதில் கலந்துகொண்டார். அதேபோல பாகிஸ்தான் சார்பில் பாதுகாப்பு அமைச்சர் காவாஜா கலந்து கொண்டார். 2021ல் தாலிபான்கள் ஆப்கனில் ஆட்சிக்கு வந்த பிறகு இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட மிக மோசமான மோதல் இதுவாகும்.












Click it and Unblock the Notifications