ஆப்கன் இந்திய தூதரகம் மீது தாக்குதல்: பின்னணியில் பாகிஸ்தான் அதிகாரிகள்: திடுக் தகவல் !
காபூல்: ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் உள்ளதாக ஆப்கன் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் பதன்கோட் விமானப்படை தளத்தில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தின் மசார்-இ-ஷெரிப் நகரில் அமைந்துள்ள இந்திய தூதரகம் மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகளின் இந்த தாக்குதல்மற்றும் ஊடுருவல் முயற்சியை தகர்தெறிந்த பாதுகாப்பு படையினர் உடனே அப்பகுதியை சுற்றி வளைத்து, தீவிரவாதிகளுடன் கடும் சண்டையிட்டனர்.
மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ராணுவத்தை சேர்ந்தவர்கள் தான். அவர்கள் நன்கு படித்தவர்களாகவும், அறிவாளிகளாகவும், அனைத்துக்கும் தயாராக தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டனர் என்றும் ஆப்கன் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள்களுக்கும் மேலாக நீடித்த இந்த துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்தியா மட்டுமின்றி ஆப்கானிஸ்தானிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
இந்நிலையில் இந்திய தூதரகம் மீதான தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் உள்ளனர் என்று ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாண தலைமை போலீஸ் அதிகாரி கூறிஉள்ளார் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் இடையே பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட பேச்சுவார்த்தை தொடங்க இருந்த நிலையில் தீவிரவாதிகளின் தொடர் தாக்குதலால் இருநாடுகளின் உறவுகளின் விரிசல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.