லக்விக்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு முறையீடு
இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளியான லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி ஷகி உர் ரஹ்மான் லக்விக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
மும்பை தாக்குதல் தீவிரவாத திட்டத்துக்கு திட்டம் வகுத்து கொடுத்தவர்களில் முக்கியமானவன் லக்வி. மும்பை குண்டுவெடிப்பில் இவனுக்கு உள்ள தொடர்பு குறித்த ஆதாரங்களை இந்தியா பாகிஸ்தானிடம் வழங்கியுள்ள நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு ராவல்பிண்டியில் அடெய்லா சிறையில் அவன் அடைக்கப்பட்டுள்ளான். இந்நிலையில் அவனுக்கு ஜாமீன் வழங்கி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதை தொடர்ந்து பாகிஸ்தான் அரசு பொது பாதுகாப்பு பராமரிப்பு சட்டத்தின் கீழ் லக்வியை சிறையில் அடைத்தது. இதை எதிர்த்து லக்வி தாக்கல் செய்த மனுவை விசாரித்த இஸ்லாமாபாத் நீதிமன்றம், லக்வியை சிறையில் அடைத்ததற்கு இடைக்கால தடை விதித்தது.
இதற்கும் இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் ஆட் கடத்தல் வழக்கில் லக்வி மீண்டும் கைது செய்யப்பட்டான். இந்நிலையில் லக்விக்கு மும்பை தாக்குதல் வழக்கில் ஜாமீன் வழங்கியதை எதிர்த்து அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு மேல்முறையீடு செய்யதுள்ளது.