இந்தியாவால் பீதியான பாகிஸ்தான்.. திடீர் ஏவுகணை சோதனை நடத்துவது ஏன்? பின்னணி
இஸ்லாமாபாத்: காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ‛அட்டாக்' செய்யும் என்று பாகிஸ்தான் அஞ்சி நடுங்குகிறது. அதோடு இந்தியாவை சமாளிக்க வேண்டும் என்பதற்காக கராச்சியில் ஏவுகணை சோதனையை தொடங்கி உள்ள நிலையில் அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
பாகிஸ்தானையும், பயங்கரவாதிகளையும் பிரிக்க முடியாத நிலை உள்ளது. நம்மிடம் இருந்து தனியாக பிரிந்து அண்டை நாடாக இருந்தாலும் கூட பாகிஸ்தான் என்பது பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடாக உள்ளது. குறிப்பாக காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நம்மிடம் மோதி வருகின்றனர்.

நேற்று முன்தினம் ஜம்மு காஷ்மீரில் உள்ள மிக முக்கிய சுற்றுலா தலமாக பஹல்காம் அருகே புல்மேடு பகுதியில் நுழைந்த பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். 26 பேர் பலியான நிலையில் 12 பேர் காயமடைந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் உயிருக்கு பயந்து தங்களை விட்டு விடும்படி கூறினாலும் கூட பயங்கரவாதிகள் கேட்காமல் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.
இந்த கொடூர தாக்குதலுக்கு எல்இடி எனும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளையாக செயல்படும் ‛தி ரெசிஸ்டென்ட் ஃப்ரண்ட்' என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.
இது பாகிஸ்தானை நடுங்க வைத்துள்ளது. ஏனென்றால் இந்தியாவை ஒப்பிடும்போது பாகிஸ்தானின் ராணுவம், விமானம், கப்பற்படை வலிமை குறைந்தது. இதனால் பயந்துப்போன பாகிஸ்தான் இப்போது ஏவுகணையை கையில் எடுத்துள்ளது. கராச்சி கடற்கரையில் பாகிஸ்தான் இன்றும், நாளையும் ஏவுகணை சோதனை நடத்துவதாக அறிவித்துள்ளது.
நிலம் மற்றும் கடல் பரப்பில் இருந்து ஏவுகணையை ஏவும் வகையில் இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது. கராச்சியில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இன்று தொடங்கிய இந்த சோதனை நாளை வரை 2 நாட்கள் நடைபெற உள்ளது. ஆனாலும் சோதனை செய்யப்படும் ஏவுகணையின் பெயர், அதன் ரேஞ்ச் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனை பாகிஸ்தான் ரகசியம் காக்கிறது. இருப்பினும் இந்தியா தாக்கினால் பதிலடிக்கு தயாராகும் முனைப்பில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனையை திடீரென்று நடத்தி வருகிறது.
இதன் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது. அதாவது இந்த தாக்குதல் நடந்த பிறகு பிரதமர் மோடி சவூதி பயணத்தை பாதியில் கைவிட்டு இந்தியா திரும்பினார். மத்திய பாதுகாப்புத்துறை, உள்துறை, வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் அடுத்தடுத்து ஆலோசனை மேற்கொண்டர். இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்பட பல முக்கிய அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனையின்போது பயங்கரவாதிகளின் தாக்குதல் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது. முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதனால் எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தானை இந்தியா தாக்கலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக போர் விமானம், ஏவுகணை, ட்ரோன்களை பயன்படுத்தி தாக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதனால் தான் தற்போது பாகிஸ்தான் ஏவுகணை சோதனையை தொடங்கி உள்ளது.
மேலும் பாகிஸ்தானின் இந்த திடீர் ஏவுகணை சோதனையை நம் நாடு உன்னிப்பாக கவனித்து வருகிறது. அதோடு இது நம் நாட்டுக்கு எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இதனால் பாகிஸ்தானின் ஒவ்வொரு நடவடிக்கையையும் தீவிரமாக கண்காணிக்க தொடங்கி உள்ளது நம் நாடு. ஏனென்றால் ஏற்கனவே பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பு தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட் ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்தியது. இப்போது ஏவுகணையை பாகிஸ்தான் கையில் எடுத்துள்ளது.
இருப்பினும் பாகிஸ்தான் எத்தகைய ஏவுகணையை வைத்து சோதனை நடத்தினாலும் கூட மோதல் என்று வந்துவிட்டால் இறுதியில் இந்தியா வெல்லும். ஏனென்றால் நம் நாட்டிடம் அதற்கு ஏற்ப ஏவுகணை, போர் விமானம், கப்பற்படை, வீரர்களின் பலம் உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications