"இம்ரான் கான் கொலை செய்யப்படுவார்,, ஓப்பனாக மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் அமைச்சர்! பெரும் பரபரப்பு
இஸ்லமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் இப்போது இம்ரான் கான் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தி வருகிறார். இதற்கிடையே பாகிஸ்தான் அமைச்சரின் பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தானில் இக்கட்டான சூழல் நிலவி வருகிறது. அங்கே ஏற்கனவே பொருளாதார குழப்பம் காரணமாக விலைவாசி உச்சத்தில் உள்ளது அனைவருக்கும் தெரியும். அத்தியாவசிய பொருட்கள் விலையும் உச்சத்தில் இருக்கிறது.
இதனால் அவர்கள் உதவிக்குச் சர்வதேச நாணய நிதியத்தையும் நாடியுள்ளனர். பொருளாதார குழப்பம் ஒரு பக்கம் என்றால் அரசியல் நெருக்கடியும் மற்றொரு பக்கம் ஏற்பட்டுள்ளது.
‛சைத்தான்’.. பிரதமர் மோடியை விமர்சித்த பாகிஸ்தான் மாஜி கிரிக்கெட் வீரர் சயீத் அன்வர்.. சர்ச்சை
பாகிஸ்தான்
இப்போதுள்ள ஷெரீப் அரசுக்கு எதிராக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்துள்ளார். விரைவாகத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டங்களைத் தொடர்ந்து வருகிறார். இது ஷெரீப் அரசுக்கு மிகப் பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. அவரை ஓரம்கட்ட ஷெரீப் தரப்பு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தோஷகானா வழக்கில் அவரை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும், நீதிமன்றத்தில் ஆஜரானதால் அவர் கைது நடவடிக்கையில் இருந்து தப்பினார்.
ராணா சனாவுல்லா
இதற்கிடையே அந்நாட்டில் உள் துறை அமைச்சர் ராணா சனாவுல்லா சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இம்ரான் கானை பாகிஸ்தான் அரசின் எதிரி என்று குறிப்பிட்டுள்ள பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா, நாட்டின் அரசியலை இம்ரான் கான் மிக மோசமான நிலைக்கு எடுத்துச் சென்றுவிட்டதாகவும் ஒன்று அவர் கொல்லப்படுவார் இல்லையென்றால் நாங்கள் கொலை செய்யப்படுவோம் என்று கூறி அதிர வைத்துள்ளார். பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஒருவரான ராணா சனாவுல்லா, இப்படிச் சொல்லியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கொலை முயற்சி
இம்ரான் கான் இப்போது இருக்கும் பாகிஸ்தான் அரசுக்கு எதிராகத் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறார். முன்னதாக கடந்த ஆண்டு நவம்பரில் பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் வஜிராபாத்தில் நடந்த பேரணியின் போது இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. நல்வாய்ப்பாக அதில் 70 வயதான இம்ரான் கானுக்கு பெரியளவில் காயம் ஏற்படவில்லை. காலில் மட்டுமே துப்பாக்கி குண்டு பாய்ந்தது. அப்போதே தனது கொலை முயற்சிக்குப் பின்னணியில் ராணா சனாவுல்லா இருப்பதாக இம்ரான் கான் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இம்ரான் கான் கொல்லப்படுவார்
மேலும், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், மூத்த ஐ.எஸ்.ஐ அதிகாரிக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறியிருந்தார். இந்தச் சூழலில் ராணா சனாவுல்லாவே இம்ரான் கான் கொலை செய்யப்படுவார் என்று கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது குறித்து ராணா சனாவுல்லா மேலும் கூறுகையில், "ஒன்று இம்ரான் கான் கொல்லப்படுவார்.. அல்லது நாங்கள் கொலை செய்யப்படுவோம். இரு தரப்பில் ஒரு தரப்பு மட்டுமே இருக்க முடியும் என்ற சூழலுக்கு அவர் நாட்டை அழைத்துச் சென்றுவிட்டார்.
எதிரி
அவரது கட்சியே அப்போது ஆபத்தில் இருக்கிறது. இம்ரான் கான் அரசியலைப் பகையாகவும் போராகவும் மாற்றிவிட்டார். இம்ரான் கான் இப்போது எங்கள் எதிரி, அவர் இனிமேல் அதன்படியே நடத்தப்படுவார்" என்றார். இதுபோன்ற கருத்துக்கள் பாகிஸ்தானில் பதற்றத்தையும் அராஜகமான சூழலை ஏற்படுத்துமே என்ற கேள்விக்கு, ஏற்கனவே பாகிஸ்தானில் அதுபோன்ற நிலை தான் நிலவுகிறது என்று அவர் தெரிவித்தார். அதேநேரம் ராணா சனாவுல்லாவின் இந்த கருத்துக்கு இம்ரான் கான் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கண்டனம்
ராணா சனாவுல்லாவின் கருத்து பாக். அரசிடம் இருந்து இம்ரான் கானுக்கு நேரடி உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதையே காட்டுவதாகச் சாடியுள்ளனர். மேலும், ராணா சனாவுல்லா அமைச்சரா அல்லது ரவுடியா என்றே தெரியவில்லை என்றும் சாடியுள்ளனர். இம்ரான் கான் உயிருக்கு வெளிப்படையாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் கவனிக்கவேண்டும் என்றும் இம்ரான் கான் கட்சியினர் தெரிவித்துள்ளனர். மேலும், கடந்த காலங்களில் இல்லாத அளவுக்குத் தரம் தாழ்ந்து ஆளும் தரப்பு பேசி வருவதாகவும் சாடியுள்ளனர்.