ராமர் கோயிலால் அச்சுறுத்தல்.. ஐக்கிய நாடுகள் சபையில் புலம்பி தள்ளிய பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: ராமர் கோவில் கட்டியதற்கும் கும்பாபிஷேக விழா நடைபெற்றதற்கும் கண்டனம் தெரிவிக்கிறோம். இந்தியாவின் இந்த போக்கு இந்திய முஸ்லிம்களின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நலனுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக உள்ளது என்று ஐக்கிய நாடுகள் அவையின் பாகிஸ்தானுக்கான நிரந்தர தூதர் முனிர் அக்ரம் கூறியுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட 2019-ல் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து ஸ்ரீராம ஜென்ம தீர்த்த சேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டது. அதன் பிறகு 2020ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பிரமாண்டமாக கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவில் கட்டும் பணி இன்னும் முடிவடையவில்லை. இருப்பினும் முதல் தளத்துக்கான பணி முழுவதுமாக முடிவடைந்துவிட்டது.

இதையடுத்து கடந்த 22ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. பிரதமர் மோடி அதில் பங்கேற்று கோவில் கருவறையில் நிறுவப்பட்ட 5 வயது பால ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தார். கடந்த 23ம் தேதி முதல் அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது தினமும் கோவிலில் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
கோவில் கருவறையில் 51 அங்குல உயரத்தில் 200 கிலோ எடையுடன் சிரித்த முகத்துடன் குழந்தை ராமர் அருள் பாலிக்கிறார். ராமர் கோவில் திறக்கப்பட்டது முதலே பக்தர்கள் கூட்டம் அங்கு அலைமோதுகிறது. இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் ராமர் கோவிலுக்கு சென்று தரிசனம் மேற்கொண்டு வருகிறார்கள். வரும் நாட்களில் அயோத்தி வரும் பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் அவையில், ராமர் கோவில் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பியுள்ளது. எப்போதும் இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதை பாகிஸ்தான் வாடிக்கையாக கொண்டுள்ளது. சர்வதேச மன்றங்களிலும் இந்தியாவின் உள்விவகாரங்கள் குறித்து அவ்வப்போது பேசி வருகிறது. இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது. ஆனாலும் திருந்தாத பாகிஸ்தான் இந்தியாவின் அவ்வப்போது சீண்டி வருகிறது.
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்து இருப்பது பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் அவையின் பாகிஸ்தானுக்கான நிரந்தர தூதர் முனிர் அக்ரம் கூறியுள்ளார். இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் அவையின்சிவில் கூட்டமைப்புக்கான துணைப் பொதுச் செயலாளர் மிகுவல் ஏஞ்சல் மொரடினோஸுக்கு பாகிஸ்தான் தூதர் முனிர் அக்ரம் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தக் கடிதத்தில், ராமர் கோவில் கட்டியதற்கும் கும்பாபிஷேக விழா நடைபெற்றதற்கும் கண்டனம் தெரிவிக்கிறோம். இந்தியாவின் இந்த போக்கு இந்திய முஸ்லிம்களின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நலனுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. அதேபோல, பிராந்தியத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது” என்று பாகிஸ்தான் தனது கடிதத்தில் கூறியது.
பாகிஸ்தான் தூதர் கூறுகையில், “இந்தியாவை கடுமையாக பாகிஸ்தான் கண்டித்துள்ளது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவிலை கட்டியிருப்பதாகவும் கடுமையான வார்த்தைகளில் இந்தியாவை சாடி இந்தக் கடிதத்தில் பாகிஸ்தான் குற்றம் சட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையில் ஏற்கனவே கஷ்மீர் விவகாரத்தை பலமுறை பாகிஸ்தான் எழுப்பியுள்ளது. பாகிஸ்தான், காஷ்மீர் விவகாரத்தை கையில் எடுக்கும் போதெல்லாம் இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications