ட்விஸ்ட்! பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இன்று ராஜினாமா? கலைக்கப்படும் நாடாளுமன்றம்! பரபர பின்னணி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை 3 நாள் முன்கூட்டியே கலைக்க பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் அதிபர் ஆரிப் ஆல்விக்கு இன்று கடிதம் எழுதுவதோடு, அவர் ஒப்புதல் அளிக்காத பட்சத்தில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் இன்று தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதும், அதன் பின்னணியில் உள்ள மாஸ்டர் பிளானும் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானில் கடந்த 2018 ல் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

இதையடுத்து அவர் பிற கட்சிகளின் உதவியுடன் கூட்டணி அமைத்து பிரதமரானார். இவரது ஆட்சி சமீபத்தில் கலைந்தது. அவரது கூட்டணியில் உள்ள கட்சியினர் ஆதரவை வாபஸ் பெற்றதால் இம்ரான் கான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது கருவூல மோசடியில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக இம்ரான் கான் ஆட்சி கலைந்தவுடன் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்தன. பாகிஸ்தான் பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் ( பிஎம்எல்-என்) கட்சியின் தலைவரான ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றார். இவர் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஆவார். இதற்கிடையே தான் பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி, வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நாட்டு மக்களின் வாழ்க்கை பெரிய அளவில் பாதித்தது. தற்போது நிலைமை ஓரளவு பரவாயில்லை.
இத்தகைய சூழலில் தான் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஆகஸ்ட் 12ம் தேதி வரை உள்ளது. இத்தகைய சூழலில் தான் முன்கூட்டியே அதாவது 3 நாளுக்கு முன்பே இன்று நாடாளுமன்றத்தை கலைக்க ஷெபாஸ் ஷெரீப் முடிவு செய்துள்ளார். மேலும் அவரும் பிரதமர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுதொடர்பாக ஷெபாஸ் ஷெரீப் இன்று பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்விக்கு கடிதம் எழுத உள்ளதாக கூறப்படுகிறது. அவர் ஒப்புதல் அளித்தால் நாடாளுமன்றம் கலைக்கப்படும். ஆனால் ஆரிப் ஆல்வி இம்ரான் கான் கட்சியில் இருந்து வந்தவர். இதனால் அவர் ஒப்புதல் அளிக்காமல் இருக்கலாம் என கூறப்படுகிறது. இது நடக்கும் பட்சத்தில் ஷெபாஸ் ஷெரீப் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஷெபாஸ் ஷெரீப் ஏறக்குறைய தனது ராஜினாமா முடிவை உறுதி செய்துள்ளார். ஏனென்றால் அவர் ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமையகத்துக்கு சென்ற நிலையில் அவருக்கு ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் வரவேற்று பிரியா விடை கொடுத்தார்.
இதனால் பாகிஸ்தான் நாட்டின் அரசியல் சூழல் என்பது பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது. இதற்கிடையே தான் நாடாளுமன்ற கலைப்பின் பின்னணியில் உள்ள விபரம் வெளியாகி உள்ளது. அதாவது பாகிஸ்தானை பொறுத்தமட்டில் நாடாளுமன்றம் 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் பட்சத்தில் அடுத்த 60 நாட்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். மாறாக நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்தால் அடுத்த 90 நாட்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தற்போது நாடாளுமன்றத்தை கலைப்பதன் மூலம் தேர்தல் பணிகளை மேற்கொள்ள ஷெபாஸ் ஷெரீப் கட்சிக்கு கூடுதலாக 30 நாட்கள் கிடைக்கும். இதனை கருத்தில் கொண்டு தான் 3 நாட்களுக்கு முன்பு இன்றே நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முடிவு செய்துள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications