இந்தியாவுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார்: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் அறிவிப்பு
வாலட்டா: இந்தியாவுடன் எந்தவித நிபந்தனையும் இன்றி பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
தெற்கு ஐரோப்பாவில் உள்ள மால்டா தீவு நாட்டில் காமன்வெல்த் மாநாடு நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், பாகிஸ்தானின் ஜியோ தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறுகையில், பாகிஸ்தான் அண்டை நாடுகளுடன் நல்லுறவை வளர்க்கவே விரும்புகிறது.
இந்தியா, ஆப்கானிஸ்தான் உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் சுமுக உறவைப் பேண பாகிஸ்தான் விரும்புகிறது. தெற்காசியப் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை எவ்வித நிபந்தனைக்கும் உட்பட்டதாக இருக்கக்கூடாது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தான் கடுமையாகக் கண்டிக்கிறது. பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு என்ற வகையில் பிரான்ஸின் வலியை எங்களால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
காமன்வெல்த் மாநாட்டின் ஒருபகுதியாக பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனை சந்தித்துப் பேசினேன். பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தானின் நடவடிக்கைகளை கேமரூன் பாராட்டினார். மேலும் பாகிஸ்தான், பிரிட்டன் இடையே வர்த்தக உறவை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது என்று கூறினார்.
அண்மையில் இந்தியா- பாகிஸ்தான் இடையில் பாதுகாப்பு தொடர்பாக உயர்மட்ட செயலர் அளவில் பேச்சு நடக்க இருந்தது. ஆனால் பாகிஸ்தான் அதிகாரிகள் காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதிகளை சந்தித்து பேசுவோம், இரு நாட்டு பேச்சு நடக்கும் போது பிரிவினைவாதிகளும் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தினர். இதனை இந்திய தரப்பு மறுப்புத் தெரிவித்திருந்தது. இதனால் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது.என்பது குறிப்பிடத்தக்கது.