ரெண்டு பேரும் இங்க வாங்கப்பா... இம்ரான் கான், மதகுருவுக்கு பாக். சுப்ரீம் கோர்ட் சம்மன்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானை உலுக்கி வரும் இம்ரான் கான் போராட்டத்தை தடை செய்யக் கோரி பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குப் போடப்பட்டுள்ளது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இம்ரான் கான் மற்றும் மதகுரு முகம்மது தாஹிர் அல் குவாத்ரி ஆகிய இருவரையும் இன்று கோர்ட்டில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.
கிட்டத்தட்ட 30,000 பேருடன் பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இம்ரானும், குவாத்ரியும். இந்தப் போராட்டத்தால் இஸ்லாமாபாத் முழுவதும் பதட்டம் நீடிக்கிறது.
பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலகக் கோரி இந்தப் போராட்டம் நடந்து வருகிறது. ஆனால் ஷெரீப் பதவி விலக முடியாது என்று கூறி விட்டார்.
இதையடுத்து போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாக இம்ரான் கான் கூறியுள்ளார். இந்த நிலையில்தான் இப்போராட்டத்தை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நாடாளுமன்றத்தில் உள்ள எம்.பிக்களை சிறை பிடிக்குமாறு மதகுரு குவாத்ரி தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால் அதற்குள்ளாகவே நாடாளுமன்றம் வந்திருந்த பிரதமர் ஷெரீப், பாதுகாப்புடன் அங்கிருந்து வெளியேறி தனது வீட்டுக்குப் போய் விட்டார்.