"ப்ளீஸ் உதவி பண்ணுங்க.." ஈரானை நோக்கி ஓடிய பாகிஸ்தான்.. பட்டும் படாமல் பதிலளித்த ஈரான் தலைவர் கமேனி
தெஹ்ரான்: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரில் நிலை குலைந்து போய் இருக்கிறது பாகிஸ்தான். இதற்கிடையே இந்தியா உடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக அவர் ஈரானில் நின்றபடி கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இந்தியா உடனும் நல்லுறவை வைத்திருக்கும் ஈரான் பட்டும் படாமலேயே பதிலளித்துள்ளார்.
இஸ்லாமிய நாடுகளாக இருந்தாலும் கூட ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் கடந்த காலங்களில் நல்லுறவு இருந்தது இல்லை. ஆனால், காசா மீது இஸ்ரேல் தீவிர தாக்குதலை ஆரம்பித்த பிறகு நிலைமை மாறியது. இரு நாடுகளும் பழைய பகையை மறந்துவிட்டு நெருக்கம் காட்டத் தொடங்கின.

பாகிஸ்தான் பிரதமர்
இந்தச் சூழலில் தான் இப்போது பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் ஈரான் நாட்டிற்குச் சென்றுள்ளார். இந்தியா உடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக அவர் ஈரானில் நின்றபடி கோரிக்கை விடுத்தார். இருப்பினும், இந்தியா உடனும் ஈரான் நல்லுறவை வைத்திருக்கும் சூழலில், ஈரான் தலைவர் அயதுல்லா செய்யத் அலி கமேனி பட்டும் படாமலேயே கருத்து தெரிவித்தார்.
ஈரான்- பாகிஸ்தான்
இந்தச் சந்திப்பின் போது, இஸ்ரேலுக்கு எதிராகப் பாகிஸ்தான் இருப்பதை கமேனி வரவேற்றார். அவர் மேலும் கூறுகையில், "சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்கா உட்பட மேற்குல நாடுகளின் அழுத்தத்திற்குப் பயந்து பல இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஆனால், பாகிஸ்தான் ஒருபோதும் இதற்கு அடிபணியவில்லை.
பாலஸ்தீனப் பிரச்சினை தான் இப்போது உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்களின் முக்கியமான கவலையாக இருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய மக்கள் வீதிக்கு வந்து போராடும் அளவுக்கு காசாவில் சூழல் மோசமாகி இருக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இப்போதும் கூட சில இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலுடன் இணைந்து நிற்கின்றன. காசாவில் போர் நிறுத்தத்தைக் கொண்டு வரச் சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்றார்.
கோரிக்கை
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு இரு தலைவர்களும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பாகிஸ்தான் இந்தியா உடனான மோதல் குறித்த சிக்கலை எழுப்பியது. இந்த விவகாரத்தில் ஈரான் தங்கள் பக்கம் இருப்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்த முயன்றது. அதாவது நேரடியாக உதவி கேட்கவில்லை என்றாலும் மறைமுகமாக இந்தியா விவகாரத்தில் உதவியையே கோரியது பாகிஸ்தான். ஆனால், ஈரான் அங்கேயே அதற்குச் சரியான பதிலைக் கொடுத்துவிட்டது.
அங்குப் பேசிய பாக். பிரதமர் ஷெரீப், "காஷ்மீர், நீர் பகிர்வு மற்றும் வர்த்தகம் என நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காணும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறோம். வர்த்தகத்தை மேம்படுத்தவும், பயங்கரவாதத்தை ஒழிக்கவும் தயாராக இருக்கிறோம். நாங்கள் அமைதியை விரும்பினோம், இப்போதும் அமைதியை விரும்புகிறோம்.! பேச்சுவார்த்தைகள் மூலம் பிராந்தியத்தில் அமைதிக்காகக் காக்க நடவடிக்கை எடுப்போம். பிரச்சினைகளையும் தீர்ப்போம்" என்றார்.
சரியான பதில்
பாகிஸ்தானின் திட்டத்தை உணர்ந்தே ஈரான் மிகவும் துல்லியமான பதிலைக் கொடுத்தது. ஈரான் அதிபர் கமெனி, "பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மோதல்கள் முடிவுக்கு வந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.. மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் தீர்க்கப்படும் என்று நம்புகிறோம்" என்று மட்டும் குறிப்பிட்டார்.
இந்தியாவின் அதிரடி ஆபரேஷன் சிந்தூர் மற்றும் சிந்து நதி நீர் உட்படப் பல நடவடிக்கைகளால் பாகிஸ்தான் திணறிக்கொண்டு இருக்கிறது. எப்படியாவது கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என்றே விரும்புகிறது. இதன் காரணமாகவே இப்போது இந்த பிரச்சினையை ஈரானிடம் தூக்கிச் சென்றுள்ளது. இருப்பினும், இந்தியாவுடன் நல்லுறவைக் கொண்டிருப்பதால் ஈரான் இந்த விவகாரத்தில் உள்ளே வராமல் தள்ளியே இருக்கிறது.
பின்னணி
பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக்கோரி அங்கு சில போராளிகள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்தாண்டு அந்த பலூச் போராளிகள் எல்லையில் ஈரான் ராணுவம் மீது தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலடியாகப் பாகிஸ்தான் பகுதிகளில் ஈரான் தாக்குதல் நடத்தியிருந்தது. இதனால் இரு தரப்பிற்கும் இடையே மோதல் எழுந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications