அமைதிப் பேச்சுவார்த்தை எதிரொலி: ஒரு மாதம் போர்நிறுத்தம் என பாக். தாலிபான் அறிவிப்பு
கராச்சி: பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் ஆதரவாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அடுத்த ஒரு மாதத்திற்கு போர் நிறுத்தம் மேற்கொள்ள இருப்பதாக பாகிஸ்தான் தாலிபன்கள் அறிவித்துள்ளனர்.
கடந்த ஏழு வருடங்களுக்கும் மேலாக பாகிஸ்தானில் தீவிரவாதிகள் அட்டூழியம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், அங்கு அமைதியை மீட்டெடுக்கும் முயற்சியாக தாலிபன் இயக்கத்துடன் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் பிரதிநிதிகள் அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொண்டனர். அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மத்தியிலும் தீவிரவாதத் தாக்குதல் தொடரவே செய்தது.
இதற்கிடையே கடந்த 2010ஆம் ஆண்டில் கடத்தப்பட்ட 23 துணை ராணுவ வீரர்களை தாலிபன்கள் கொடூரமாக கொலை செய்த காட்சிகளைச் சமீபத்தில் வெளியிட்டது தாலிபன் இயக்கம். இது அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் உத்தரவின் பேரில் பழங்குடி மக்கள் வாழும் வரிசிஸ்தான் பகுதியில் மறைந்துவாழும் தீவிரவாதிகளை விமானத் தாக்குதல் மூலம் அழிக்கத் தொடங்கியது.
இந்நிலையில், பாகிஸ்தான் அரசுடன் தடைப்பட்ட பேச்சுவார்த்தை மீண்டும் தொடர வழிவகுக்கும் விதமாக ஒரு மாத போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளது பாகிஸ்தானின் டெஹ்ரிக்-இ-தாலிபன் இயக்கம்.
இது தொடர்பாக அவ்வியக்கத்தின் செய்தித் தொடர்பாளரான ஷாஹிதுல்லா ஷாஹித் வெளியிட்டுள்ள தகவலாவது:-
நாம் இன்று ஒரு மாத கால போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளோம். இந்த அறிவிப்பை மதித்து நமது தோழர்கள் அனைவரும் தங்களது நடவடிக்கைகளைக் கைவிடும்படி கேட்டுக்கொள்கின்றோம். அரசிடமிருந்து வந்த சாதகமான அறிவிப்பு, மத அறிஞர்களின் கோரிக்கை மற்றும் நாட்டின் சிறந்த எதிர்காலம் போன்றவற்றிக்காக ஒரு மாதத்திற்கு எந்த தாக்குதல் நடவடிக்கையிலும் ஈடுபடுவதில்லை என்று முடிவு செய்துள்ளோம்' என ஷாஹித் தெரிவித்துள்ளார்.