இந்தியாவை கண்டு பயந்துபோய் கிடக்கும் பாகிஸ்தான்! லாகூர், கராச்சி வான்வெளி மூடப்படுவதாக அறிவிப்பு
இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்தியா எப்போது பதிலடி கொடுக்குமோ என்று தெரியாமல் அச்சத்தில் இருக்கும் பாகிஸ்தான், தினசரி ஏதாவது ஒன்றைச் செய்து வருகிறது. இதற்கிடையே இப்போது மாதம் முழுக்க கராச்சி மற்றும் லாகூர் விமான மண்டலங்களின் குறிப்பிட்ட பகுதிகளை மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
கடந்த வாரம் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் தீவிரவாதிகள் நாசவேலையில் ஈடுபட்டனர். அங்கு பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் இயற்கை அழகை ரசிக்க வந்த அப்பாவி பொதுமக்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். சமீப ஆண்டுகளில் காஷ்மீரில் நடந்த மிக மோசமான தாக்குதலாக இது அறியப்படுகிறது.

பாகிஸ்தான்
இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்து. அதேபோல பாகிஸ்தானியர்களின் விசாவை ரத்து செய்து சொந்த நாட்டிற்குத் திரும்ப உத்தரவிட்டுள்ளது.
வான்வெளி மூடல்
மேலும், பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி நடத்துவது தொடர்பாக எந்தவொரு முடிவையும் ராணுவமே எடுத்துக் கொள்ளலாம் என்று முழுச் சுதந்திரத்தையும் பிரதமர் மோடி வழங்கியுள்ளார். இதனால் இந்தியா எப்போது எப்படித் தாக்குதல் நடத்துமோ என்ற அச்சத்தில் பாகிஸ்தான் இருக்கிறது. இதற்கிடையே பாதுகாப்பு காரணங்களைக் காரணம் காட்டி, கராச்சி மற்றும் லாகூர் விமான மண்டலங்களின் குறிப்பிட்ட பகுதிகளை மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
அதாவது மே மாதம் முழுவதும் தினசரி கராச்சி மற்றும் லாகூர் விமான மண்டலங்களின் குறிப்பிட்ட பகுதிகளைக் குறிப்பிட்ட நாட்களில் மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவின் பதிலடியை நினைத்துப் பயந்து போய் கிடக்கும் பாகிஸ்தான் தினசரி இதுபோல ஒரு அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.
பாகிஸ்தான் சொல்வது என்ன
இது தொடர்பாக அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், "மே 1 முதல் மே 31 வரை உள்ளூர் நேரப்படி தினமும் அதிகாலை 4:00 மணி முதல் காலை 8:00 மணி வரை குறிப்பிட்ட வான்வெளி மூடப்படும்" தெரிவிக்கப்பட்டுள்ளது. வான்வெளியின் குறிப்பிட்ட பகுதியைத் தினசரி மூடுவதால் விமானச் சேவை எதுவும் பாதிக்கப்படாது என்றும் தடைசெய்யப்பட்ட நேரங்களில் விமானங்கள் வேறு பாதை வழியாகத் திருப்பி விடப்படும் என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்தியா பாகிஸ்தான்
முன்னதாக நேற்றைய தினம் தான் பாகிஸ்தான் நாட்டின் அனைத்து விமானங்களுக்கும் இந்தியாவின் வான்வெளியைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. இதனால் பாகிஸ்தான் விமானங்கள் தெற்காசிய நாடுகளுக்குச் செல்லும் போது இந்தியாவைச் சுற்றிச் செல்ல வேண்டும். ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்கு இது பெரிய அடியாக இருக்கும். மேலும், இரு நாட்டுப் பதற்றமும் அதிகரித்து வருவதால், பாகிஸ்தான் பங்குச்சந்தை வரலாறு காணாத வகையில் சரிவைச் சந்தித்து வருகிறது. கடந்த இரு நாட்களாக பாகிஸ்தான் பங்குச்சந்தை வேகமாகச் சரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications