இதுவே இறுதி யுத்தம்! இனி இல்லை இஸ்ரேல் ஆக்கிரமிப்பு! 'வெறி' உற்சாகத்தில் போர்களத்தில் பாலஸ்தீனர்கள்!
காஸா: 'உலக பூமிப்பந்தில் இனி ஆக்கிரமிப்பு என்பதே இருக்கவே கூடாது. இதுவே பாலஸ்தீனர்கள் நடத்தும் இறுதி யுத்தத்தின் இலக்கு' என்ற பிரகடனத்துடன் இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் இயக்கம் போர் நடத்துவதை அந்நாட்டு இளைஞர்கள் உற்சாகத்துடன் 'துப்பாக்கி' வேட்டுகளை தீர்த்தபடியும் பிடிபட்ட இஸ்ரேல் டேங்குகளை எரித்தபடியும் கொண்டாடுகின்றனர்.
இஸ்ரேல் மீது இதுவரை இல்லாத பெருந்த் தாக்குதலை ஹமாஸ் ஜிஹாதி அமைப்பு நடத்தி வருகிறது. இப்படி ஒரு 'ஏவுகணை' கொரில்லா தாக்குதலை எதிர்பார்க்காத இஸ்ரேல் ஆடித்தான் போயிருக்கிறது. ஒரு பக்கம் ஏவுகணைத் தாக்குதல்- இன்னொரு பக்கம் ஆயுதங்களுடன் ஊடுருவி கொத்து கொத்தாக பல நூறு பேரை பிணைக் கைதிகளாக தூக்கிச் செல்லும் யுக்தி என ஹமாஸ் இயக்கம் இஸ்ரேலில் ருத்ரதாண்டவமாடுகிறது.

ஹமாஸ் தலைவர்கள் அறிவிப்பு: அதிநவீன ராணுவத்தை குவித்து வைத்திருக்கும் இஸ்ரேல் சும்மாவா இருக்கும்? வெறும் 350 கிமீ மட்டுமே இருக்கும் காஸா முனை, மேற்கு கரை பகுதிகளை துவம்சம் செய்து கொண்டிருக்கிறது. என்ன நடந்தாலும் என்ன பேரழிவானாலும் சரி.. இதுவே இறுதி யுத்தம்; ஒவ்வொரு இளைஞனும் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு களத்துக்கு வாருங்கள்.. நமக்கான தருணம் இதுவே. நமக்கான வாய்ப்பும் இதுவே என ஹமாஸ் தலைவர்கள் இடைவிடாத பேரறிவிப்பு செய்ய ஆயுதங்களுடன் பாலஸ்தீன இளைஞர்கள் போர்வெறியேற்றப்பட்ட நிலையில் களத்துக்குள் நுழைந்து கொண்டிருக்கின்றனர்.
இறுதி யுத்தமா?: வாழ்வா? சாவா? என்கிற இறுதி யுத்தம் பற்றி எல்லாம் பாலஸ்தீன இளைஞர்கள் கவலைப்படவில்லை. இஸ்ரேலை இப்படி நிலைகுலைய வைத்துவிட்டோம் என்ற மகிழ்ச்சியில் கைகளில் ஏந்தி இருக்கும் துப்பாக்கி வேட்டுகளை விண்ணில் ஆசை தீர சுட்டு கொண்டாடுகிற படங்களை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
கொண்டாடும் பாலஸ்தீன இளைஞர்கள்: இஸ்ரேல் எனும் நாடு 1948-ம் ஆண்டு உருவான காலம் முதல் தலைமுறை தலைமுறையாக ஆக்கிரமிப்புக்கு எதிரான யுத்தத்தினூடே வாழ்ந்து மடிந்து போவது பாலஸ்தீனர்கள் வாழ்க்கை. புரட்சியாளராக பின்னாளில் சமரசவாதியாக யாசர் அராபத் வாழ்ந்து மறைந்த காலத்தில் ஜிஹாதியிசம் வேர்பிடிக்க எகிப்து, ஈரான் நாடுகள் அரவணைக்க இப்போது இஸ்ரேலை மூர்க்கமாக தாக்கி வருகிறது ஹமாஸ் இயக்கம். மரணம் நிச்சயம் என்ற போதும் நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து விடுவிக்கப்படுகிறது என்ற மகிழ்ச்சியில் சிக்கிய இஸ்ரேல் டாங்கிகளை தீக்கிரையாக்கி பாலஸ்தீனர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் பன்னாட்டு ஊடகங்கள் எழுதி இருக்கின்றன.












Click it and Unblock the Notifications