ஜெனீவா ஐ.நா. கூட்டத்தில் விடுதலை புலி தலைவர்களின் உறவினர்கள் கதறல் வாக்குமூலம்
ஜெனீவா: ஜெனீவாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலி தலைவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டு இலங்கை இறுதி யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள் குறித்து கலங்க வைக்கும் வாக்குமூலங்களை கண்ணீருடன் முன்வைத்தனர்.
இலங்கையில் 2009-ம் ஆண்டு ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடந்த போரின்போது லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக உலகின் பல நாடுகளும் இலங்கைக்கு கண்டனம் தெரிவித்தன.

ஐ.நா. மனித உரிமை அமைப்பும் படுகொலைகள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்காவால் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதனை ஐ.நா.வின் பெரும்பான்மையான உறுப்பு நாடுகள் ஆதரித்தன. இதனைத் தொடர்ந்து இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு இடைக்கால அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. இறுதி அறிக்கை வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா. மன்றத்தில் வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில் ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 29-வது கூட்டத்தொடர் கடந்த ஜூன் 15-ந் தேதி தொடங்கி நடைபெற்றது.
இதில் இலங்கையில் நடந்த போரின்போது வெள்ளைக் கொடியோடு சரணடைந்த புலித்தேவன், நடேசன், மலரவன் உள்ளிட்ட ஈழப்போராளிகள், அப்பாவித் தமிழர்கள் என 18 ஆயிரம் பேர் நிலை என்ன? அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா? என்பதை சொல்ல ஏன் இலங்கை அரசு மறுக்கிறது? என்பது பற்றி பல்வேறு தரப்பினர் கேள்விகளை எழுப்பினர்.
முன்னதாக டாக்டர் அன்புமணி ராமதாஸின் பசுமைத் தாயகம், பிரித்தானிய தமிழர் பேரவை, அமெரிக்க தமிழர் அரசியல் செயற்பேரவை ஆகிய அமைப்புகள் இணைந்து இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள் குறித்த சிறப்பு இணைக் கூட்டத்தையும் அங்கே நடத்தின.
இக்கூட்டத்துக்கு இங்கிலாந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழர்கள் நீதிக்கான நல்லெண்ண தூதுவருமான லீ ஸ்காட் தலைமை வகித்தார். சர்வதேச மனித உரிமைகள் சட்ட வல்லுநரும், இங்கிலாந்து வழக்கறிஞர் பேரவையின் மனித உரிமைகள் குழு தலைவருமான கிறிஸ்டி கியூசி, தமிழகத்தில் இருந்து வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவைத் தலைவர் க.பாலு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து உலகம் முழுவதும் உள்ள புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள், ஈழமக்கள், மனித உரிமை ஆர்வலர்கள் பேசினர். இலங்கையில் நடந்த போரின்போது வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த போராளிகளின் உறவினர்கள், தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி மற்றும் தங்களுடையை நிலைமை பற்றி விளக்கி, துயரம் தாங்காமல் கண்ணீர் விட்டு கதறினர்.












Click it and Unblock the Notifications