கேன்சரே இல்லை... ஆனாலும் “கீமோதெரபி” சிகிச்சை - அமெரிக்க டாக்டருக்கு “45 ஆண்டுகள்” சிறை
நியூயார்க்: அமெரிக்காவில் புற்று நோயால் பாதிக்கப்படாதவர்களுக்கும், புற்று நோயால் பாதிக்கப்பட்டும் கீமோதெரபி தேவைப்படாத நோயாளிகளுக்கும் "கீமோதெரபி" சிகிச்சை அளித்த டாக்டருக்கு 45 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள கிழக்கு மெச்சிகனில் உள்ள ஆக்லாந்து பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் பரித் பாடா. இவர் ஒரு புற்று நோய் சிகிச்சை மருத்துவர். இவர் மெச்சிகன் மாகாணத்தில் 7 மருத்துவமனைகளை நடத்தி வருகின்றார். இந்நிலையில் தன்னிடம் சிகிச்சை பெறுவதற்காக வந்த தொடக்க நிலையில் புற்று நோய் பாதித்த நோயாளிகளுக்கும், நோயே இல்லாமல் பரிசோதனைக்காக வந்தவர்களுக்கும் புற்று நோய் வேரூன்றி இருப்பதாகக் கூறி தேவையின்றி "கீமோதெரபி" சிகிச்சை அளித்துள்ளார். மேலும், அதன் மூலம் அமெரிக்காவில் செயல்படும் மெடிகேர் திட்டத்தில் பணம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் அவரிடம் ரத்த புற்று நோய்க்கு சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவர் சந்தேகமடைந்து அவரைப் பற்றி போலீசில் புகார் செய்தார். அதை தொடர்ந்து பரித் பாடாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், அவர் 553 பேருக்கு தேவையின்றி கீமோதெரபி சிகிச்சை அளித்தது தெரியவந்தது. விசாரணையில் மேலும் கேன்சர் பாதிக்கப்படாத நோயாளிகளுக்கும் கூட இவர் கீமோதெரபி கொடுத்து, ரூபாய் 150 கோடிக்கு மேல் மெடிகேர் திட்டத்தில் பணம் பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இத்திடுக்கிடும் மருத்துவ சேவைக்கு எதிரான செயல்களைச் செய்த கைது செய்யப்பட்ட டாக்டர் பரித் பாடா மீது நீதிமன்றத்தில் மருத்துவ சட்டங்களுக்கு மாறான இச்சிகிச்சைகள் குறித்து வழக்குத் தொடரப்பட்டது. அப்போது தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்ட அவர் தன்னை மன்னிக்கும் படி மன்றாடினார்.
ஆனால், இவர் மிகவும் அபாயகரமான மோசடி பேர்வழி. பணத்திற்காக கேன்சர் பாதிப்பில்லாதவர்களுக்கும் கீமோதெரபி சிகிச்சையினை அளித்துள்ளார். அதனால் பலருடைய வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது என வழக்கறிஞர்கள் கூறிய வாதத்தினை ஏற்றுக் கொண்டு அவருக்கு 45 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது. மேலும், அவர் கிட்டதட்ட 34 வருடங்கள் இச்சிறைதண்டனையை வசதிகள் குறைவான சிறையிலேயே அனுபவிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.