“பையை மறப்பாங்க.. பையனை மறப்பாங்களா”.. சவுதி விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பெண் பயணி!
ஜெட்டா: குழந்தையை விமான நிலையத்தில் மறந்து விட்டுச் சென்ற பெண் பயணியால், விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த சம்பவம் சவுதியில் நடந்துள்ளது.
பயணங்கள் மேற்கொள்ளும் போது, சமயங்களில் நமது பைகளை மறந்து செல்வது பயணிகளிடையே சகஜமானது தான். ஆனால், குழந்தையையே தாய் மறந்துவிட்டு விமானத்தில் ஏறிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள கிங் அப்துல் அஜீஜ் விமானநிலையத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றது. அங்கிருந்து கோலாலம்பூர் புறப்பட்ட விமானத்தில் இருந்த பெண் பயணி ஒருவர், விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், 'என் குழந்தை என் குழந்தை' என கத்தியுள்ளார்.

பெண் பயணி:
இதனால் அதிர்ச்சி அடைந்த விமான ஊழியர்கள் அப்பெண்ணிடம் விசாரித்துள்ளனர். அப்போது தன்னுடைய குழந்தையை விமான நிலையத்திலேயே மறந்து விட்டுவிட்டு வந்து விட்டதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.

தாய்-சேய் மகிழ்ச்சி:
உடனடியாக இது தொடர்பாக விமான நிலையத்திற்கு தெரிவித்தார் விமானி. பின்னர் விமானம் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது. பதற்றமான சூழலுக்குப் பின் குழந்தை, தாயுடன் சேர்ந்தது. இதனால் சம்பந்தப்பட்ட அந்தத் தாய் மட்டுமல்ல, விமானத்தில் பயணம் செய்த மற்ற பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வைரல் வீடியோ:
இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில், விமானி, விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் பேசுகிறார். "கடவுள் நம் பக்கம் இருக்கிறார்... நாங்கள் திரும்பி வர முடியுமா என்ன? பயணி ஒருவர் அவர் குழந்தையை மறந்து விட்டுவிட்டு வந்து விட்டார்" என்று விமானி கேட்கிறார். அதற்கு, "உடனே திரும்புங்கள், இது எங்களுக்கு புதிதான ஒன்று" என்று ஆச்சரியமடைந்த கட்டுப்பாட்டு அறை அதிகாரி பதிலளிகிறார்.

இது புதுசால்ல இருக்கு:
விமானம் வானில் எழும்பிய பிறகு தொழில்நுட்ப காரணங்கள் அல்லது பயணியின் ஆரோக்கிய கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப் பட்டது என்ற செய்தியை நாம் அடிக்கடி ஊடகத்தில் பார்த்திருப்போம். ஆனால், தாயே குழந்தையை மறந்து விட்டுச் சென்றதாக் இப்படி ஒரு செய்தியை இப்போது தான் கேள்விப் படுவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications