ஜி20 நாடுகள் மாநாடு- இத்தாலி சென்றடைந்தார் பிரதமர் மோடி- முதல் முறையாக போப் ஆண்டவரை சந்திக்கிறார்!
டெல்லி: ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று இத்தாலி தலைநகர் ரோம் நகர் சென்றடைந்தார். வாடிகன் நகரில் போப் ஆண்டவரான (போப்பாண்டவர்) போப் பிரான்சிசை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். போப் ஆண்டவருடனான பிரதமர் மோடியின் முதல் சந்திப்பு என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது.
ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு ரோம் நகரில் நாளையும் நாளை மறுநாளும் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு இத்தாலி பிரதமர் மரியோ டிரகி அழைப்பு விடுத்திருந்தார்.
ஜி 20 கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்கின்றனர். இம்மாநாட்டில் கொரோனா கால பாதிப்புகள், கொரோனா லாக்டவுன்களால் பாதிக்கப்பட்ட சர்வதேச நாடுகளின் பொருளாதார மீட்சி, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. இம்மாநாட்டில் பங்கேற்க இத்தாலி தலைநகர் ரோம் சென்றடைந்துள்ளார் பிரதமர் மோடி.

இத்தாலி- இந்திய வர்த்தக உறவு
இந்த மாநாடு நிகழ்ச்சிகளின் போது இத்தாலி பிரதமர் மரியா டிரோகி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். பிரதமர் மோடியின் இத்தாலி பயணம் குறித்து அந்நாட்டுக்கான இந்திய தூதர் நீனா மல்கோத்ரா கூறுகையில், ஜி 20 உச்சி மாநாட்டை முன்னிட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்கள், வர்த்தகத்துறை அமைச்சர்கள் ஏற்கனவே சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளனர். இத்தாலி- இந்தியா இடையேயான இருதரப்பு வர்த்தக உறவு 36% அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு காலத்திலும் இந்தியாவில் இத்தாலி நிறுவனங்களின் முதலீடுகள் அதிகரித்துள்ளன. இந்தியாவில் தற்போது 700 இத்தாலி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன இத்தாலியில் 100க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் செயல்படுகின்றன என்றார்.

போப் ஆண்டவருடன் முதல் சந்திப்பு
மேலும் வாடிகனுக்கு சென்று போப் பிரான்சிசை சந்திக்கவும் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். போப் பிரான்சிசுடனான சந்திப்பு 30 நிமிடம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிகனில் போப் பிரான்சிசை பிரதமர் மோடி முதல் முறையாக சந்தித்து பேசுவது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.

கிளாஸ்கோ மாநாடு
ஜி 20 மாநாடு நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் கிளாஸ்கோவில் நடைபெறும் பருவ நிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் (COP26 climate summit) பிரதமர் மோடி பங்கேற்கிறார். இம்மாநாடு நவம்பர் 1, 2 ஆகிய நாட்கள் நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பருவநிலை மாநாடு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

போரிஸ் ஜான்சனுடன் சந்திப்பு
இம்மாநாட்டு நிகழ்ச்சிகளின் போது இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். இச்சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள் குறித்து இருநாட்டு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications