3 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிப்பு.. பிரதமர் மோடியின் வங்கதேச பயணமும் ரத்து
டாக்கா: தெற்காசியாவில் கொரோனா வைரஸால் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் காரணமாக ஷேக் முஜிபுர் ரெஹ்மானின் (வங்கதேச தந்தை) பிறந்த நாள் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் வங்கதேசத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி வங்கதேசத்திற்கு வரும் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
கடந்த ஞாயிற்றுக்கிழமை என்று வங்கதேசத்தில் முதல்முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது உறுதியாகி உள்ளது. அந்நாட்டு அதிகாரப்பூர்வ தகவலின் படி, மூன்று பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பேர் அண்மையில் இத்தாலியில் இருந்து திரும்பியவர்கள் ஆவர்.
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த, மார்ச் 17 அன்று வங்கதேச தந்தை ஷேக் முஜிபுர் ரெஹ்மானின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை ரத்து செய்ய வங்கதேச அரசு முடிவு செய்துள்ளது. இந்த விழாவில் பங்கேற்க வருவதாக அறிவித்திருந்த பிரதமர் மோடி தனது வங்கதேச பயணத்தை ரத்து செய்துள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில், ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பதாக இருந்தது. உலக அளவில் கொரோனா வைரஸ் பரவுவதால் உச்சி மாநாடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிரதமர் மோடி ஐரோப்பா செல்லவில்லை. தற்போது கொரோனா வைரஸ் பிரச்னையால் வங்கதேச பயணத்தையும் பிரதமர் நரேந்திர மோடி ரத்து செய்தார்.