'ரோஹிங்கியா' என்று உருகி சொன்ன போப்... அகதிகளிடம் பாவமன்னிப்பும் கோரினார்!
ஆசிய சுற்றுப்பயணம் வந்துள்ள போப் பிரான்சிஸ் ரோஹிங்கியா அகதிகளிடம் பாவ மன்னிப்புக் கோரியுள்ளார்.
Recommended Video

டாக்கா : ஆசிய சுற்றுப்பயணத்தின் போது தான் தவிர்த்த ரோஹிங்கியா என்ற வார்த்தையை சொல்லி போப் பிரான்சிஸ் ரோஹிங்கியா அகதிகளிடம் பாவ மன்னிப்பு கோரியுள்ளார்.
போப் பிரான்சிஸ் ஆசிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் வந்துள்ளார். வங்கதேச தலைநகர் டாக்காவில் ரோஹிங்கியா அகதிகளை போப் ஆண்டவர் சந்தித்தார். அவர்கள் எதிர்கொண்ட அனைத்து துன்பங்களுக்கும் பாவ மன்னிப்புக் கோரியதுடன் அவர்களின் உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் எனக் கூறினார்.
முஸ்லீம், புத்தம், இந்து மற்று கிறிஸ்த்துவ மதத்தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்திலும் போப் பிரான்சிஸ் பேசினார். அப்போது மியான்மர் பயணத்தின் போது சொல்ல மறுத்த 'ரோஹிங்கியா' என்ற சொல்லுடன் ரோஹிங்கியா இன மக்களை அழைத்துள்ளார்.

16 ரோஹிங்கிய அகதிகளுடன் சந்திப்பு
மியான்மரில் இருந்து இடம்பெயர்ந்து வங்கதேசத்தில் தஞ்சமடைந்திருக்கும் 16 ரோஹிங்கியாக்கள்( 12 ஆண்கள், 2 இரண்டு பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள்) டாக்காவிற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். மியான்மர்- வங்கதேச எல்லையோரத்தில் உள்ள காக்ஸ் பஜாரில் 6,20,000 ரோஹிங்கியா அகதிகள் தற்காலிக முகாம்களில் வசித்து வருகின்றனர். இந்த நிலை ஆசியாவின் மிகமோசமான அகதிகள் நெருக்கடி என கூறப்படுகிறது.

உரிமைகள் கிடைக்க வேண்டும்
ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளை வாழ்த்தி வரவேற்று கைகளைப் பற்றிய போப் பிரான்சிஸ், துன்பங்கள் நிறைந்த அவர்களின் கதைகளைக் கேட்டுள்ளார். ரோஹிங்கியா மக்களை கடவுளுடன் ஒப்பிட்ட போப், "உங்களை துன்பத்திற்கு உள்ளாக்குபவர்கள், உங்களை துன்புறுத்தியவர்கள், உங்களை காயப்படுத்தியவர்களின் பெயரால் நான் மன்னிப்புக் கேட்கிறேன். எல்லாவற்றிருக்கும் மேலாக இவ்வுலகம் உங்கள் மீது காட்டுகின்ற அலட்சியத்திற்கும் மன்னிப்புக் கோருகிறேன்" என்றார்.

ஆதரவளிக்க வேண்டும்
ரோஹிங்கியா அகதிகளை அனுமதித்த வங்கதேசத்தின் பெரிய மனதை சுட்டிக்காட்டிய போப், "இப்போது பெரிய மனம் படைத்த உங்களிடம்(ரோஹிங்கியா) நாங்கள் கோரியுள்ள பாவமன்னிப்பை தருமாறுக் கேட்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். ரோஹிங்கியா அகதிகளுக்கு தொடர்ந்து உதவிகள் கிடைக்கவும் அவர்கள் உரிமைகள் அங்கீகரிக்கப்படவும் ஆதரவுக் குரல்கள் எழுப்ப வேண்டும் என அவர் வேண்டியுள்ளார்.

தவிர்த்த அந்த வார்த்தையைச் சொன்ன போப்
மியான்மர் அரசு ரோஹிங்கியா இன மக்களை பெங்காலிகள் என வர்ணிக்கும் சூழலில், மியான்மர் பயணத்தின் போது ‘ரோஹிங்கியா' என்ற சொல்லை போப் ஆண்டவர் தவிர்த்தது கடும் விமர்சனங்களை உருவாக்கியிருந்தன. மியான்மர் பயணத்தை நிறைவுச் செய்து வங்கதேசம் வந்துள்ள போப், இப்போது ரோஹிங்கியா இன மக்களை ‘ரோஹிங்கியா' என்ற சொல் கொண்டு அழைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications