வாடிகன் பிரார்த்தனையில் இஸ்ரேல், பாலஸ்தீன தலைவர்கள் பங்கேற்பு!!
வாடிகன்: உலக அமைதிக்காக வாடிகனில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய தலைவர்களும் கூட்டாக கலந்து கொண்டனர்.
பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதிகளையும், ஜெருசலேமின் கிழக்குப் பகுதியையும் இஸ்ரேல் கைப்பற்றியது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையேயும் பிரச்சினைகள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.
இது குறித்து 3 ஆண்டுகளுக்கு முன்னர் தடைபட்ட பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு அமெரிக்காவின் முயற்சியினால் மீண்டும் தொடங்கியது. அதுவும் பாதியிலேயே நின்றுபோனது. இந்த நிலையில் கடந்த மாதம் இந்த நாடுகளுக்கு பயணம் செய்த போப் பிரான்சிஸ் இஸ்ரேலின் அதிபர் ஷிமோன் பெரேசையும், பாலஸ்தீனிய அதிபர் மஹ்மூத் அபாஸையும் வாடிகனுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.
இந்த அழைப்பினை ஏற்று நேற்று இருவரும் வாடிகனுக்கு வந்தனர். அவர்கள் இருவரையும் வாடிகனின் விசாலமான போப்பாண்டவர் மாளிகையைக் கைவிட்டு தான் குடியிருக்கும் சாதாரணமான விருந்தினர் மாளிகைக்கு போப் வரவேற்றார்.
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக அதுவும் அமெரிக்கா தலைமையிலான பேச்சுவார்த்தை பரஸ்பர குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து முறிந்து ஒரு மாதம் கடந்த நிலையில் முதன்முறையாக இந்த இரு அதிபர்களும் நேற்று நேரில் சந்தித்துக்கொண்டனர்.
பின்னர் மூவரும் வாடிகனின் எந்தவித மத அடையாளங்களும் இல்லாத நடுநிலைத்தளம் எனப்படும் இடத்துக்கு வந்தனர். அங்கு மரங்கள் அடர்ந்திருந்திருந்த பகுதியில் இருந்த அறை ஒன்றில் போப்பிற்கு இருபுறமும் அவர்கள் அமர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இதன் மூலம் இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்சனை முடிவுக்கு வரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.