உக்ரைன் விமானம் என நினைத்து தாக்கினேன்: ரஷ்ய ஆதரவுப்படை தலைவர்
கீவ்: மலேசிய விமானத்தை உக்ரைன் விமானப்படை விமானம் என தவறுதலாக நினைத்து தான் சுட்டுவிட்டதாக ரஷ்ய ராணுவ ஆதரவுப் படையின் தலைவரான இகோர் ஸ்ட்ரெல்கோவ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து 298 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு வியாழக்கிழமை மதியம் கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 உக்ரைனில் ரஷ்ய எல்லை அருகே பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 298 பேரும் உடல் கருகி பலியாகினர்.
இந்நிலையில் ரஷ்ய ஆதரவுப்படை தீவிரவாதிகளின் தலைவரான இகோர் ஸ்ட்ரெல்கோவ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
உக்ரைன் விமானப்படை விமானம் என்று நினைத்து நான் தான் மலேசிய விமானத்தை சுட்டுத் தள்ளினேன். மலேசிய விமானம் ஒரு பறவை போன்று சுரங்கம் அருகே விழுந்ததால் குடியிருப்பு பகுதி தப்பியது. இந்த பகுதியில் பறக்கக் கூடாது என்று உக்ரைன் படையினரை எச்சரித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் மலேசிய விமானம் பற்றிய செய்தி உலகிற்கு தெரிய வந்ததும் இகோர் தனது ட்வீட்டை அழித்துவிட்டார்.
ரஷ்ய ராணுவத்தின் உளவுப் பிரிவில் உயர் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர் இகோர் என்பது குறிப்பிடத்தக்கது.