ஆக்கப்பூர்வமான ஒரு சந்திப்பு..ஆனால் பைடன் என்னை அமெரிக்காவுக்கு வரும்படி அழைக்கவில்லை..புதின் பேச்சு
ஜெனீவா: அமெரிக்க அதிபர் பைடனுடன் நடைபெற்ற சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள புதின், ஜோ பைடன் தன்னை வெள்ளை மாளிகைக்கு வரும்படி அழைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் பைடன், ரஷ்யா அதிபர் விளாடிமர் புதின் ஆகியோர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஆலோசனை நடத்தினர்.
முதல் சந்திப்பிலேயே செம சம்பவம்.. நன்றி தெரிவித்த புதின்.. நேருக்கு நேர் சந்திப்பு.. விளக்கிய பைடன்
உலகில் இருபெரும் வல்லரசு நாடுகளின் தலைவர்களின் இந்தச் சந்திப்பிற்குச் சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.
சந்திப்பு
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டம் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதல்கட்ட ஆலோசனையில் முக்கிய உயர் அதிகாரிகள் மட்டும் கலந்துகொண்டனர். அதைத் தொடர்ந்து சிறிய இடைவெளிக்குப் பிறகு நடைபெற்ற இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்தில் கூடுதலாக சில அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விளாடிமர் புதின் செய்தியாளர் சந்திப்பு
இந்த சந்திப்பிற்குப் பிறகு ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் செய்தியாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது பேசிய அவர், "சைபர் பாதுகாப்புத் துறையில் அமெரிக்காவும் ரஷ்யாவும் ஆலோசனைகளை தொடங்கவுள்ளன. இரு தரப்பினரும் சில கடமைகளை ஏற்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் அமெரிக்காவிற்கும் சரி ரஷ்யாவிற்கும் சைபர்ஸ்பேஸ் மிகவும் முக்கியமானது என்றே நாங்கள் கருதுகிறோம். அமெரிக்காவில் தான் அதிகளவில் சைபர் தாக்குதல்கள் நடந்துள்ளது என்றும்கூட கடந்த சில ஆண்டுகளாக ரஷ்யாவும் இந்த பிரச்சினைகளை எதிர்கொள்கிறது.
சைபர் தாக்குதல்
உதாரணமாக, ரஷ்யாவின் மிக முக்கியமான பகுதியில் உள்ள சுகாதார அமைப்புகளில் ஒன்றின் மீது சமீபத்தில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. எனவே, இதில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஆனால் அமெரிக்கா இதில் ஆர்வமாக இருப்பதாக நான் நினைக்கவில்லை. எங்களைப் பொறுத்தவரை இரு நாட்டு வல்லுநர்களுக்கு இடையே தகவல் பரிமாற்றம் வேண்டும். கொள்கை ரீதியாக ரஷ்யா அதற்குத் தயாராக உள்ளது" என்றார்.
அலெக்சி நவால்னி
மேலும், ரஷ்யாவில் கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி குறித்துப் பேசிய புதின், "அந்த நபர் ரஷ்யாவின் சட்டத்தை மீறிவிட்டார். இது அவருக்கும் தெரியும். ஒருமுறை அல்ல; இரு முறை அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார். அந்த நபர் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றார். சிகிச்சை முடிந்து சுயநினைவு திரும்பிய பின்னரும் அவர் தொடர்ந்து இணையத்தில் வீடியோக்களை வெளியிட்டார் என்பதை மறந்துவிடக் கூடாது. அவர் தெரிந்தே சட்டத்தைத் தொடர்ச்சியாக மீறினார்" என்றார்.
ஆர்டிக் பகுதி
அலெக்ஸி நவல்னியின் ஆதரவாளர்கள் மீது ரஷ்ய ஒடுக்குமுறை நடவடிக்கைகளை எடுத்து வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, அமெரிக்காவில் ப்ளாக் லைவ்ஸ் மேட்டர் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஜனவரி 6 அமெரிக்க நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்தும் இந்தப் போராட்டங்களை ஒடுக்க அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகளையும் குறிப்பிட்டார். ஆர்டிக் பகுதிகளில் ரஷ்யா புதிதாக எதுவும் செய்யவில்லை என்றும், இப்பகுதியில் அழிக்கப்பட்ட உள்கட்டமைப்பை மீட்டெடுக்கும் பணிகளிலேயே ரஷ்யா ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
வெள்ளை மாளிகைக்கு அழைக்கவில்லை
மேலும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தன்னை வெள்ளை மாளிகைக்கு வரும்படி அழைக்கவில்லை என்றும் அமெரிக்க அதிபர் பைடனுடன் நடந்து இந்தச் சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும் புதின் விவரித்தார். 10 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் துணை அதிபராக பைடன் இருந்தபோது, அவரை சந்தித்தாக நினைவு இல்லை என்றும் புதின் குறிப்பிட்டார்.
ஆக்கப்பூர்வமான சந்திப்பு
இருநாட்டுக் கைதிகளையும் பரஸ்பரம் விடுவிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் இரு நாட்டு வெளியுறவுத் துறைகள் அமைச்சகங்கள் இதில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் அவர் கூறினார். அமெரிக்க அதிபர் பைடனுடன் நடைபெற்ற இந்தச் சந்திப்பு உறுதியான முடிவுகளை எடுக்கும் சூழ்நிலையை உருவாக்க உதவும் ஆக்கப்பூர்வமான ஒரு சந்திப்பாக இருந்ததாக புதின் குறிப்பிட்டார்.