கர்நாடகா: 2 நாட்கள் ஓய்வுக்கு பின் ராகுல் காந்தி பாதயாத்திரை தொடக்கம்- சோனியா காந்தியும் பங்கேற்பு!
மாண்டியா: கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் இருந்து இன்று தமது பாதயாத்திரையை மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடங்கினார். ராகுலின் இன்றைய நடைபயணத்தில் அவரது தாயாரும் காங்கிரஸ் இடைக்கால தலைவருமான சோனியா காந்தி இணைந்து கொண்டார்.

2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை இலக்காக வைத்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் கடந்த 7-ந் தேதி ராகுல் காந்தியின் பாதயாத்திரையை திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் பாதயாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்தி பின்னர் கேரளாவில் பயணம் மேற்கொண்டார். கேரளாவில் மொத்தம் 19 நாட்கள் ராகுல், நடைபயணம் மேற்கொண்டார். கேரளாவில் ராகுல் காந்தியின் பயணத்துக்கு மிகப் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது. இதன்பின்னர் நேற்று மீண்டும் தமிழகத்தின் கூடலூரில் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டார்.

இன்று காலை முதல் கர்நாடகாவில் ராகுல் பயணத்தை தொடங்கி உள்ளார். கர்நாடகாவில் மொத்தம் 21 நாட்கள் ராகுல் நடைபயணம் மேற்கொள்கிறார். கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் தொடங்கிய இந்த நடைபயணம் மைசூரு, மாண்டியா, ராய்ச்சூர் வழியாக தெலுங்கானா செல்கிறது.

இந்நிலையில் தசரா கொண்டாட்டங்களுக்காக ராகுல் தமது பயணத்தில் 2 நாட்கள் ஓய்வு எடுத்திருந்தார். கடந்த 2 நாட்கள் ஓய்வுக்குப் பின்னர் இன்று காலை மாண்டியா மாவட்டத்தில் இருந்து தமது பாதயாத்திரையை ராகுல் காந்தி மீண்டும் தொடங்கி உள்ளார். இன்றைய பாதயாத்திரையின் போது சோனியா காந்தியும் இணைந்து கொண்டார்.













Click it and Unblock the Notifications