பஞ்சம்...பசி...பட்டினிக்கு 23 பேர் பலி - பிராணிகளை சாப்பிடும் நிலையில் சிரியாவின் “மதாயா” கிராமம்!
ஜெனீவா: சிரியா உள்நாட்டு போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு 23 பேர் இதுவரையில் பட்டினியால் உயிரிழந்துவிட்டதாக அங்கு மருத்துவ உதவியில் ஈடுபட்டு வருகின்ற மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
சிரிய அரசு ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள மதாயா பகுதியில் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதியில் இருந்து இதுவரை 23 பேர் உணவு கிடைக்காமல் பட்டினியால் உயிரிழந்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
போர் காரணமாக பொது மக்கள் குறிப்பிட்ட இடத்திற்குள்ள வலுகட்டாயமாக வசிக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். இதனால் உணவு போன்ற அடிப்படை தேவைகள் கிடைக்கவில்லை. அதுவும் மதாயா பகுதியில் கோரமான சூழ்நிலை நிலவுகிறது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

பணயக் கைதிகளான மக்கள்:
உள்ளூர் போரில் சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பசி பட்டினியால் தவித்து வருகிறார்கள். இங்கு ஆயிரகணக்கான மக்கள் துப்பாக்கிமுனையில் பணய கைதிகளாக உள்ளனர்.

வாகனங்களுக்கு அனுமதி இல்லை:
இங்குள்ள மதயா கிராமம் அதிபர் பஷிர் அல் ஆசாத் படைகளால் முற்றுகையிடபட்டு உள்ளது.இந்த கிராமத்தில் மொத்தம் 40 ஆயிரம் பேர் உள்ளனர். இந்த கிராமத்திற்குள் எந்த வாகனங்களையும் அனுமதிப்பது இல்லை.

முரட்டுத்தனமான மருத்துவம்:
இங்குள்ளவர்கள் பசி மற்றும் பட்டினியால் அங்குள்ள இலை மற்றும் பூக்களை வேகவைத்து சாப்பிடுகிறார்கள்.இங்கு மயக்க மருந்து இல்லாமல் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

குமுறும் செஞ்சிலுவை சங்கம்:
மேலும் மருந்து பொருட்கள் மிகவும் குறைந்து ஆபத்தான நிலையில் இப்பகுதி உள்ளது. குழந்தைகளுக்கு உரிய அத்தியாவசிய பால் டின் 200 பவுண்டுக்கு விற்கபடுகிறது. சர்வதேச செஞ்சலுவை சங்கம் இங்கு மோசமான நிலை உள்ளதாக தெரிவித்து உள்ளது.

நாய், பூனைகளே உணவு:
இது குறித்து அதன் செய்தி தொடர்பாளர் பவுல் கிரஸியிக், "குடி மக்கள் பசி பட்டினியால் மரணமடைந்து வருகிறார்கள். அவர்கள் மண்ணில் கிடைக்கும் பொருளை உண்கின்றனர். வீட்டில் வளர்க்கும் அல்லது தெருவில் திரியும் நாய், பூனைகளை சமைத்து சாப்பிடுகிறார்கள்.மிக நீண்ட நாட்களாக இந்த மக்களுக்கு மிகவும் அத்தியவசியமான உணவு மற்றும் மருந்து பொருட்கள் கிடைக்கவில்லை" எனக் கூறி உள்ளார்.

குழந்தைகள் அதிகம்:
மேலும் ஐ.நா. சபை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி மதாயா பகுதியில் கிட்டதட்ட 40 ஆயிரம் பேருக்கு உயிர்காக்கும் உதவிகள் தேவைப்படுகிறது. இவர்களில் பாதி பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications