கண்மூடித்தனமான தாக்குதல்.. ரெட் கிராஸ் செயற்பாட்டாளர்கள் இருவர் கொலை! காசாவில் இஸ்ரேல் அட்டூழியம்
காசா: ஹமாஸை அழிப்பதாக கூறிக்கொண்டு பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த தாக்குதல் அத்துமீறி இருக்கிறது. அதாவது காசாவில் உள்ள செஞ்சிலுவை சங்கத்தினர் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி ஊடகம் இந்த செய்தியை உறுதி செய்திருக்கிறது. நேற்று கான் யூனிஸில் இருந்த செஞ்சிலுவை சங்கத்தினரின் கட்டிடத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

உயிரிழந்தவர்கள் இப்ராஹிம் ஈத் மற்றும் அஹமத் அபு ஹிலால் என அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். இதில் இப்ராஹிம் ஈத் ஆயுத மாசுபாட்டு அதிகாரியாக பணியாற்றியிருந்தார். கண்ணி வெடி, ரசாயன ஆயுதங்களால் பாதிக்கப்பட்ட நிலப்பரப்பை அடையாளம் கண்டு, அந்த பகுதியில் பொதுமக்கள் நடமாடாதவாறு எச்சரிக்கை பலகையை வைப்பார். மட்டுமல்லாது வெடிக்காத ஆயுதங்களை சரிபார்த்து அதை அப்புறப்படுத்தி வந்திருந்தார். பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கும் முதலுதவி சிகிச்சை செய்து வந்தார்.
அஹமத் அபு ஹிலால், ராஃபாவிலிருந்து செஞ்சிலுவை சங்க மருத்துவமனையில் பாதுகாப்பு காவலராக பணியாற்றி வந்தார். போர்க்காலங்களில் மருத்துவமனையில் பாதுகாவலராக பணியாற்றுவது சவாலானது. ஆயுத குழுக்கள் மருத்துவமனையை தாக்காமல் பார்த்துக்கொள்வது இந்த காவலர்களின் வேலையாகும். அதேபோல குண்டுவெடிப்பு, துப்பாக்கிச்சூடு நடக்கும்போது நோயாளிகளையும், மருத்துவர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றுவதும் இவர்களின் கடமையாகும்.
ஆனால் இவர்கள் இருவரையும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் இழந்திருக்கிறது. இதேபோல ஏறத்தாழ 53,000க்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் இந்த போரில் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
காசாவின் மொத்த நிலப்பரப்பில் 75% பகுதியை அடுத்த இரண்டு மாதத்திற்குள் முழுவதுமாக கைப்பற்றுவதே இஸ்ரேலின் நோக்கம் என்று சொல்லப்பட்டு வருகிறது. இதற்கு உலகம் முழுவதும் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இஸ்ரேல் செய்வது அப்பட்டமான இன அழிப்பு என்று ரஷ்யா, சீனா என உலகின் மிக முக்கிய நாடுகள் கூறி வருகின்றன. ஆனாலும் போரை நிறுத்தும் எண்ணத்தில் நாங்கள் இல்லை என்று இஸ்ரேல் கறாராக கூறியுள்ளது.
இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலுக்கு தற்போது செஞ்சிலுவை சங்கத்தினர் பலியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications