அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் தமிழ் நீதிபதி?- ஒபாமா கையில் முடிவு
வாஷிங்டன்: அமெரிக்க உச்சநீதிமன்றத்திற்கு தமிழர் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் ஆன்டனின் ஸ்கேலியா. அவர் மேற்கு டெக்சாஸ், பிக்பென்ட் பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டில் நேற்று முன்தினம் திடீரென மரணம் அடைந்தார்.
அவருக்கு வயது 79. அவரது மறைவால் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் ஒரு நீதிபதி பதவி காலியாகி உள்ளது.
கடமையை நிறைவேற்றுவேன்:
"ஸ்கேலியா மறைவால் காலியாக உள்ள இடத்துக்கு, ஒருவரை நியமிக்கும் அரசியல் சட்ட கடமையை நிறைவேற்ற நான் திட்டமிட்டுள்ளேன். அவ்வாறு எனக்கு செய்வதற்கும், புதிய நீதிபதி நியமனத்தில் செனட் சபை வாக்கெடுப்பு நடத்துவதற்கும் நிறைய அவகாசம் உள்ளது" என அமெரிக்க அதிபர் ஒபாமா கூறி உள்ளார்.
ஏற்கனவே 8 நீதிபதிகள்:
அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தவிர்த்து 8 நீதிபதிகள் உண்டு. அவர்களில் 4 பேர் மிதவாத கொள்கை உடையவர்கள், மீதி 4 பேர் பழமைவாத கொள்கை உடையவர்கள். இறந்த நீதிபதி ஸ்கேலியா பழமைவாத நீதிபதி.
அடுத்து தமிழர்தானா?:
இந்த நிலையில் புதிதாக நியமிக்கப்படவுள்ள நீதிபதி மிதவாத கொள்கை உடையவராக இருக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அப்பதவிக்கு இந்திய வம்சாவளி தமிழரான ஸ்ரீகாந்த் சீனிவாசன் பெயர் பலமாக அடிபடுகிறது.
நெல்லைக்கார நீதிபதி:
இவரது தந்தை நெல்லையை அடுத்த மேலதிருவேங்கடநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர். தாயார் சென்னையை சேர்ந்தவர். இவரது குடும்பத்தினர் 1960களில் அமெரிக்காவில் குடியேறினர். ஸ்ரீகாந்த் சீனிவாசன், அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்து பட்டமும், சட்டப் பட்டமும் பெற்றவர் ஆவார்.
கிடைக்குமா பதவி?:
அமெரிக்காவின் முதன்மை துணை அரசு வழக்கறிஞராக பணியாற்றி உள்ளார். ஹார்வர்டு பல்கலைக்கழக சட்டக்கல்லூரியில் பேராசிரியராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.