மறைந்து போனது தலைமைச் சூரியன்.. ரியாத் தமிழ்ச் சங்கம் கண்ணீர் அஞ்சலி
ரியாத்: தமிழகத்தின் தலைமைச் சூரியன் இன்று முதுமை நோவு காரணமாக மறைந்து போனது என்று ரியாத் தமிழ்ச் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இது குறித்து ரியாத் தமிழ்ச்சங்கத் தலைவர் மாலிக் இப்ராஹிம் விடுத்துள்ள அறிக்கை:
கலைஞர் மு.கருணாநிதி எனும் தலைமைச் சூரியன் முதுமை நோவு காரணமாக இன்று மறைந்து போனதை அறிந்து ரியாத் தமிழ்ச்சங்கத்தின் நிர்வாகக் குழுவினரும் செயற்குழுவினரும் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
வடமாநிலங்களுடன் ஒப்பிடுகையில் வளர்ச்சிப் பாதையில் தமிழகம் மிகமிக முன்னணியில் நிற்க உழைத்த ஓய்வறியாத் தலைவராக, தமிழின் மூதறிஞராகத் திகழ்ந்த கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் ஆற்றிய பொதுத்தொண்டுகள் பற்பல.
தமிழில் தனிப்பெரும் ஆற்றலறிஞராக, எழுத்துக்கும் பேச்சுக்கும் என்றும் எடுத்துக் காட்டப்படுபவராக, இதழாளராக, நிர்வாகத் திறமை வாய்ந்த நல்ல தலைவராக விளங்கிய கலைஞர் மு.கருணாநிதியின் மறைவு , தமிழகம் மட்டுமின்றி உண்மையில் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்குப் பேரிழப்பும் பெருந்துயரமுமாகும்.
அப்பெருமகனாரை இழந்து வாடும் தமிழுக்கும் தமிழகத்திற்கும், உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கும் ரியாத் தமிழ்ச்சங்கம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன் அப்பெருமகனாரின் வழியில் தமிழினப் பகைவர்களை வெற்றி கொள்ள தமிழர்கள் மத இன பேதம் மறந்து ஒன்றுபடவும் வேண்டுகோள் விடுக்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய தவ்ஹீத் ஜமாத் இரங்கல்:
கலைஞர் என்று மக்கள் அன்புடன் அழைக்கும் திமுக தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதி இறப்பெய்தினார் என்ற செய்தி கேட்டு துயருற்றோம் என்று இந்திய தவ்ஹீத் ஜமாத் துணைப் பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
கலைஞர் என்று மக்கள் அன்புடன் அழைக்கும் திமுக தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதி இறப்பெய்தினார் என்ற செய்தி கேட்டு துயருற்றோம்.
டாக்டர் கலைஞர் அவர்கள் ஆயுளில், 95 ஆண்டுகளையும், தமிழகத்தின் அரசியலில் 50 ஆண்டுகளையும் நிறைவு செய்திருக்கிறார். முதலமைச்சராகவும், எதிர்கட்சி தலைவராகவும் சிறப்புடன் பணி செய்திருக்கிறார்.
சமூக நீதிக்கான பெரியாரின் கொள்கைகளை சட்டமன்றம் வழியாக படிப்படியாக அமல்படுத்தி இருக்கிறார். சிறுபான்மை மக்களுடன் நல்லுறவை பேணி காத்து வந்தவர். முஸ்லிம்களின் கோரிக்கை ஏற்று 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கினார். மத்திய அரசியலிலும் தனி செல்வாக்குடன் விளங்கினார்.
இன்று அவரது மறைவு தமிழக மக்களுக்கு ஆழ்ந்த வருத்தங்களை ஏற்படுத்தி இருக்கிறது. கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைவில் வாடும் அவரது குடும்ப உறுப்பினர்கள், கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்..