புடின் மீது அதிருப்தி, "பதவியை ராஜினாமா செய்கிறேன்": டிவிட் செய்த 'ரஷ்ய பிரதமரால்' பரபரப்பு
மாஸ்கோ: "அரசின் நடவடிக்கைகளால் வெட்கப்படுகிறேன், நான் பதவியை ராஜினாமா செய்கிறேன்". இப்படி ஒரு டிவிட் ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மேத்வேதேவ் டிவிட்டர் கணக்கில் இருந்து வெளிவந்ததை பார்த்த ரஷ்ய குடிமக்கள் ஒரு நிமிடம் திகைத்துபோனது உண்மைதான்.
இந்த அதிர்ச்சி விலகும் முன்பு அடுத்ததாக ஒரு டிவிட் பிரதமர் அக்கவுண்டில் இருந்து வெளிக்கிளம்பி வந்தது. அதில் "புடின் (அதிபர்), நீங்கள் செய்வது தவறு என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
என்னடா இந்த ரஷ்யாவுக்கு வந்த சோதனை என்று நினைத்து மக்கள் தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டனர். இந்த தகவல் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும், தொழில்நுட்ப அதிகாரிகளுக்கும் தெரியவந்தது. பிரதமர் அதுபோன்ற கீச்சை வெளியிடவில்லை என்று தெரியவந்ததும், விஷமிகள் செயல்தான் இது என்பதை அறிந்து கொண்டனர்.
உடனடியாக டிவிட்டர் கணக்கை தங்கள் வசம் கொண்டுவரும் முயற்சியை தொழில்நுட்ப அதிகாரிகள் மேற்கொண்டனர். சுமார் 40 நிமிடங்களுக்கு பிறகு டிவிட்டர் கணக்கு மீண்டும் மீட்கப்பட்டது. இந்த தகவல் வெளியான பிறகுதான் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இதனிடையே ரஷ்ய பிரதமர் டிவிட்டர் அக்கவுண்டை ஹேக் செய்த நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.