உக்ரைன் விவகாரத்தால் ஜி20 மாநாட்டில் இருந்து புதின் வெளிநடப்பு செய்தாரா?
பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஜி 20 நாடுகளின் மாநாடு முடிவடைதற்கு முன்னதாகவே ரஷ்யா அதிபர் புதின் கிளம்பிச் சென்றதால் அவர் வெளிநடப்பு செய்தாரா? என்ற புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆனால் தாம் திட்டமிட்டபடிதான் ரஷ்யா திரும்பியதாக புதின் விளக்கம் அளித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் ஜி20 அமைப்பின் நாடுகளின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு முன்னதாகவே அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தன.
அதில், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா தலையிடக் கூடாது; உக்ரைனின் கிரிமீயாவை ரஷ்யா தன்னுடன் இணைத்திருக்கக் கூடாது என்றும் மலேசிய பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது. இதனால் ஜி20 நாடுகள் மாநாட்டிலும் இந்த விவகாரம் கடுமையாக எதிரொலிக்கும்; அப்படி எதிரொலித்தால் ரஷ்யா அதிபர் புதின் வெளிநடப்பு செய்வார் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் நேற்று ஜி20 நாடுகளின் மாநாட்டிலும் உக்ரைனின் பகுதிகளை ரஷ்யா இணைத்துக் கொள்வதற்கும் கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா ஆதரவாக இருப்பதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பல நாடுகளின் தலைவர்கள் ரஷ்யாவின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து பேசினர்.
இந்த மாநாடு முடிவடைந்து கூட்டறிக்கை வெளியிடுவதற்கு முன்னதாகவே ஆஸ்திரேலியாவை விட்டு புதின் ரஷ்யா புறப்பட்டுச் சென்றார். ஜி20 மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறிய முதலாவது தலைவர் புதின் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் அவர் உக்ரைன் விவகாரத்தை முன்வைத்து வெளிநடப்பு செய்தாரா என்ற பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இது குறித்து விளக்கம் அளித்துள்ள புதின், திங்கள்கிழமையன்று எனக்கு முக்கியமான பணிகள் இருக்கின்றன. இதனால் 4 அல்லது 5 மணிநேரமாவது உறங்க வேண்டியுள்ளது. இதை இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர்களிடமும் தெரிவித்தேன்.
அவர்களும் என்னுடைய சூழலைப் புரிந்து கொண்டனர் என்று கூறியுள்ளார். இதேபோல் ஆஸ்திரேலியா பிரதமர் அலுவலகமும், புதினின் பயணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்றுதான் விளக்கம் அளித்துள்ளது.