மேலை நாடுகளின் பொருளாதார தடைக்கு பதிலடி கொடுத்ததால் ரஷ்யாவில் உணவு பற்றாக்குறை!
மாஸ்கோ: மேற்கத்திய நாடுகளின் உணவு பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ரஷ்யாவிலுள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் உணவு பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மேற்கத்திய நாடுகளின் நெருக்கடிக்கு வளைந்து கொடுக்காமலும், தனது கொள்கையை விட்டுக் கொடுக்காமலும் ரஷ்யா நடைபோடுகிறது.
பொருளாதார தடை
உக்ரைன் நாட்டில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆக்கிரமிப்பு செய்துகொண்டுள்ளதை ரஷ்யா தடுக்கவில்லை என்பது மேற்கத்திய நாடுகளின் குற்றச்சாட்டாக உள்ளது. இதற்காக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்துள்ளன.
மேற்கு நாடுகளுக்கு பதிலடி
மேற்கத்திய நாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்த நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களை தவிர்க்க ரஷ்யா உத்தரவிட்டது. இதையடுத்து இம்மாதம் தொடக்கத்தில் இருந்து மேற்கத்திய உணவு வகைகள் ரஷ்யாவுக்கு வருவதில்லை.
சூப்பர் மார்க்கெட்டுகள் காலி.. காலி
ரஷ்யாவிலுள்ள பெரும்பாலான சூப்பர் மார்க்கெட்டுகள், வெளிநாட்டு தயாரிப்புகளை நம்பிக் கொண்டுள்ளன. தற்போது வெளிநாட்டில் இருந்து உணவு பொருட்கள் வராததால் சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்களின் இருப்பு குறைந்துவிட்டது. உலகமயமாக்கலுக்கு முன்பு உள்ளூர் பண்டங்களே அதிக அளவு நுகரப்பட்டதை போல இப்போதும் எங்கள் நாட்டு கட்டமைப்பு மாற்றப்பட்டுள்ளது என்று ரஷ்ய வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.
சைவம், அசைவம்
வெளிநாடுகளில் இருந்து தக்காளி, முட்டைகோசு போன்றவற்றை மட்டுமின்றி, இரால், மீன்கள் போன்ற அசைவ உணவுகளையும் ரஷ்யா இறக்குமதி செய்து வந்தது. இப்போது அதை அண்டை நாடுகளில் இருந்தும், தங்களது நாடுகளில் இருந்தும் மட்டும் பெற வேண்டிய நிலையில் ரஷ்யா உள்ளது. இருப்பினும் தனது கொள்கையில் சற்றும் தளராமல் நடைபோடுகிறது ரஷ்யா.