லெபனான் வாழ் சவூதி அரேபியர்கள் நாடு திரும்புங்கள்: அபாயச் சூழலால் தூதரகம் எச்சரிக்கை
பெய்ரூட்: லெபனானில் வசித்து வரும் சவூதி அரேபியர்கள் உடனடியாக அங்கிருந்து திரும்பி விடுமாறு சவூதி அரேபிய தூதரகம் அழைப்பு விடுத்துள்ளது. சவூதி அரேபிய மக்களுக்கு எதிரான சூழல் லெபனானில் நிலவுவதால் அபாயகரமான நிலை ஏற்பட்டிருப்பதால் சவூதி மக்கள் அங்கிருந்து போவது நல்லது என்றும் அது கூறியுள்ளது.
லெபனானில் நடந்த சில குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு சவூதிதான் காரணம் என்று லெபனான் பத்திரிக்கைகள் சில செய்தி வெளியிட்டுள்ளன. இதையடுத்தே சவூதி தூதரகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதுகுறித்து சவூதி தூதர் அவாத் அஸ்ஸிரி ஏஎப்பியிடம் கூறுகையில், ‘லெபனானில் வசிக்கும் சவூதி அரேபிய மக்கள் அங்கிரு்ந்து கிளம்பிச் செல்லுமாறு சவூதி தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் தற்போது ஏற்பட்டுள்ளதால் இந்த அறிவுறுத்தலை பிறப்பித்துள்ளோம்' என்றார்.
பெய்ரூட்டில் உள்ள ஈரான் தூதரகம் அருகே 2 நாட்களுக்கு முன்பு 2 தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்தது.இதில் 25 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு சவூதிதான் காரணம் என்று பத்திரிக்கைகள் சில செய்தி வெளியிட்டுள்ளன.
இதையடுத்து சவூதி மக்களை வெளியேறுமாறு அந்த நாடு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் லெபனானில் தொடர்ந்து தங்கியிருக்கும் மக்கள் மிகுந்த கவனத்துடனும், பாதுகாப்புடனும் இருக்குமாறும் அது அறிவுறுத்தியுள்ளது.