அமெரிக்காவுக்கு உதவ மறுத்த சவுதி.. டிரம்புக்கு ஆதரவளித்த 2 அரபு நாடுகள்.. ஹவுதிகளை தாக்கியது எப்படி?
ரியாத்: ஈரான் ஆதரவில் செயல்படும் ஏமன் நாட்டின் ஹவுதி அமைப்பினர் மீது இன்று அமெரிக்கா அதிரடி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 31 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ள நிலையில் இந்த தாக்குதலுக்கு அமெரிக்காவுக்கு சவுதி அரேபியா உதவவில்லை என்று அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்காவுக்கு 2 அரபு நாடுகள் உதவியதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளன.
ஹமாஸ் அமைப்புக்கு எதிராக காசா மீது இஸ்ரேல் 15 மாதம் போரை தொடங்கியது. இதில் இஸ்ரேலுக்கு, அமெரிக்கா ஆதரவு அளித்தது. ஹமாஸ் ஈரான் ஆதரவில் செயல்படும் அமைப்பாகும். இதனால் ஈரான் ஆதரவில் செயல்படும் பிற அமைப்பினர் இஸ்ரேலை தாக்கினர். லெபனானில் செயல்படும் ஹெஸ்புல்லா, ஏமனில் செயல்படும் ஹவுதிகள் இஸ்ரேலை குறிவைத்து அட்டாக் செய்தனர்.

இதில் ஹெஸ்புல்லா நேரடியாக இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஹவுதிகள் செங்கடல் பகுதியில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இன்று அமெரிக்கா நேரடியாக ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதிகளின் படை தளங்கள் மீது வெடிகுண்டுகள் வீசி கொடூர தாக்குதல் நடத்தியது.
செங்கடல் பகுதியில் அமெரிக்காவின் ஹாரி எஸ் ட்ரூமன் விமானம்தாங்கி போர்க்கப்பல் இருந்தது. இந்த விமான தாங்கி போர்க்கப்பலில் இருந்து மின்னல் வேகத்தில் பறந்து சென்ற அமெரிக்க போர் விமானங்கள் ஹவுதிகளின் படை தளங்களை குறிவைத்து தாக்கியது. ஏமன் தலைநகர் ஸனா மற்றும் வடக்கு சாடா பிராந்தியத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. படை தளங்களின் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இந்த தாக்குதலில் 31 ஹவுதிகள் இறந்தனர். 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி ஹவுதி படை தளங்களில் இருந்த ரேடார், தளவாடங்கள் கருகிப்போகின.
இந்த தாக்குதல் எந்த முன்னறிவிப்பும் இன்றி நடத்தப்பட்டது. இதனால் ஹவுதிகள் கலங்கிப்போயினர். அமெரிக்காவுக்கு உரிய முறையில் பதிலடி கொடுப்போம். பதிலடிக்கு ஹவுதிகள் தயாராக இருப்பதாக ஹவுதிகள் அறிவித்துள்ளன. இதனால் அமெரிக்கா - ஹவுதிகள் இடையே மோதல் என்பது பெரிய அளவில் நடக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தான் தற்போது இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஹவுதிகள் மீதான தாக்குதலுக்கு சவுதி அரேபியா உதவி செய்ததாக சில செய்திகள் வெளியாகி உள்ளன.
அதாவது சவுதி அரேபியாவும், ஏமனும் அண்டை நாடுகளாகும். இதனால் சவுதி அரேபியாவின் உதவியை பெற்று அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது. சவுதி அரேபியாவிடம் அமெரிக்கா Logistic உதவிகளை கேட்டுள்ளது. அதாவது தாக்குதலுக்கு தேவையான தளவாடங்கள், எரிபொருள் உள்ளிட்டவற்றை அமெரிக்கா பெற்றதாக கூறப்பட்டது. ஆனால் இந்த தகவலை சவுதிஅரேபியா அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். ஹவுதிகள் மீதான தாக்குதலுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சவுதி அரேபியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அல் அரேபியோ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
மாறாக அமெரிக்காவுக்கு வேறு 2 அரபு நாடுகள் உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த நாடுகளின் பெயர்கள் கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ். இந்த 2 நாடுகளும் ஹவுதிகள் மீதான தாக்குதலுக்கு அமெரிக்காவின் போர் விமானங்களுக்கான எரிபொருளை வழங்கியதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க ஹவுதி சார்பில், ‛‛அமெரிக்காவும், பிரிட்டனும் சேர்ந்து எங்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. பிரிட்டன் நேரடியாக தாக்குதலில் ஈடுபடவில்லை. இருப்பினும் அமெரிக்காவுக்கு பிரிட்டன் உதவி உள்ளது'' என்று கூறி உள்ளது. இதனால் அமெரிக்கா இந்த தாக்குதலை நடத்தினால் கூட அதற்கு சில நாடுகள் உதவி உள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் என்பது வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications