யானையை விட பெரியது.. 600 ஆண்டுகளுக்கு முன் அழிந்த ராட்சத பறவை! மீண்டும் உயிர்ப்பிக்கும் ஆய்வாளர்கள்
ஆக்லாந்து: சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன ஒரு வகைப் பறவையை மீண்டும் ஆய்வாளர்கள் உயிர்ப்பிக்க உள்ளனர். 220 கிலோ எடை கொண்ட இந்தப் பிரம்மாண்டப் பறவை 15ம் நூற்றாண்டிலேயே அழிந்துவிட்டன. இதை அதிநவீன டிஎன்ஏ தொழில்நுட்பம் மூலம் மீண்டும் உயிருடன் கொண்டு வரும் முயற்சியில் ஆய்வாளர்கள் இறங்கியுள்ளார்.
ஜுராசிக் பார்க் படத்தை நாம் அனைவரும் பார்த்திருப்போம். பார்த்து இருப்போம். அதில் அழிந்துபோன டைனாசருக்கு மரபணு தொழில்நுட்பம் மூலம் உயிர் கொடுத்து இருப்பார்கள். சினிமாவில் மட்டுமே சாத்தியமான இது இப்போது ரியல் வாழ்க்கையிலும் சாத்தியமாக இருக்கிறது. இந்த மரபணு தொழில்நுட்பம் மூலம் வலிமையான Aenocyon dirus எனப்படும் ஓநாயை ஆய்வாளர்கள் உருவாக்கி இருந்தனர்.

மோவா பறவைகள்
10,000- 12,500 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன இந்த ஓநாயை அதிநவீன டிஎன்ஏ அனாலிசிஸ், மரபணு எடிட்டிங் மற்றும் குளோனிங் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மீண்டும் உருவாக்கினர். கோலஸ்ஸால் பயோசயின்சஸ் (Colossal Biosciences) என்ற நிறுவனமே இதைச் செய்திருந்தது. அதே கொலோசல் பயோசயின்சஸ் நிறுவனம், இப்போது பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த ராட்சத மோவா பறவையை உயிர்ப்பிக்கப் போகிறது. நியூசிலாந்தில் வாழ்ந்த மோவா பறவைகளால் பறக்க முடியாது. அதேநேரம் இது மனிதர்களை விட மிக உயரமானதாக இருந்துள்ளது.
புகழ்பெற்ற "லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்" திரைப்பட இயக்குநர் சர் பீட்டர் ஜாக்சனுடன் இணைந்து மோவா பறவைகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் பணிகளில் கொலோசல் பயோசயின்சஸ் இறங்கியுள்ளது. யானை சராசரியாக 10 அடி வரை வளரும் நிலையில், இந்த பறவை சுமார் 12 அடி உயரம் கொண்டது. மேலும், இது சுமார் 220 கிலோ வரை எடை கொண்டதாக இருந்தது. சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு நியூசிலாந்தில் வாழ்ந்த இந்த வகைப் பறவைகள் 30 முதல் 50 ஆண்டுகள் வரை வாழ்ந்து வந்தன. நியூசிலாந்தில் குடியேறிய பாலினேசியன் நாட்டினரால் இந்தப் பறவைகளை வேட்டையாடி குவித்தனர். இதனால் 1440களில் அந்தப் பறவைகள் இனமே அழிந்து போனது.
600 ஆண்டுகள்
இந்தச் சூழலில் தான் சுமார் 600 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தப் பறவையை உயிர்ப்பிக்கும் முயற்சிகள் ஆரம்பித்துள்ளது. இதை நேய் தாஹு ஆராய்ச்சி மையம் (Ngai Tahu Research Centre) கவனித்து ஒருங்கிணைத்து வருகிறது. கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள கேன்டர்பரி பல்கலைக்கழகம் மற்றும் நியூசிலாந்தின் தென் தீவில் வாழும் மாவோரி பழங்குடி சமூகத்துடன் இணைந்து நேய் தாஹு ஆய்வு மையம் செயல்படுகிறது. இவர்கள் எல்லாம் சேர்ந்தே மீண்டும் மோவா பறவைகளுக்கு உயிர் கொடுக்க இருக்கிறார்கள்.
இருப்பினும், மோவா பறவைகளை மீண்டும் கொண்டு வருவது அவ்வளவு ஈஸி இல்லை.. டையர் ஓநாய்களை மீண்டும் உயிர்ப்பித்ததை விட இது கடினம்.. ஏனென்றால் டைர் ஓநாயின் டிஎன்ஏ புதைபடிவங்களிலிருந்து கிடைத்தது. அதைச் சாம்பல் ஓநாயின் மரபணு உடன் வைத்து டையர் ஓநாய்களை உயிர்ப்பித்தனர். ஆனால், மோவா என்பது அதன் நெருங்கிய உறவினர்களான ஈமூ மற்றும் டினமோ போன்ற பறவைகளிலிருந்து வேறுபட்ட இனமாகும்.
சிக்கல் என்ன
அதாவது டையர் ஓநாய் இனங்கள் தற்காலத்துச் சாம்பல் ஓநாய்களில் இருந்து சுமார் 5.7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்ததாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அதேநேரம் அழிந்துபோன மோவா மற்றும் தற்போது உயிருடன் இருக்கும் அதன் உறவினர் பறவையாக அறியப்படும் டினமோவும் சுமார் 58 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்தது. அதேபோல மோவா மற்றும் ஈமூ பறவைகள் சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்துவிட்டன.
அதன் பிறகு மோவா பறவைகளுக்குப் பல தனித்துவமான பண்புகளை உருவானது. அவற்றை மீண்டும் உருவாக்குவது மிகவும் சவாலானது என்கிறார்கள் ஆய்வாளர்கள். இருப்பினும், மோவா பறவைகளை உருவாக்க அழிந்துபோன ஒன்பது மோவா இனங்களின் மரபணு தொகையை வரிசைப்படுத்தி மறுகட்டமைக்கத் திட்டமிட்டுள்ளனர். பிறகு மாற்றியமைக்கப்பட்ட செல்களை, ஒரு டினமோ அல்லது ஈமூ கருமுட்டையின் உள்ளே இருக்கும் கருவுக்குள் செலுத்தத் திட்டமிட்டுள்ளனர். இந்த செல்கள் கருவின் இனப்பெருக்க உறுப்புகளை அடைந்து, பெண் மோவா முட்டைகளையும் ஆண் மோவா விந்தணுக்களையும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈமூ பறவைகள்
ஈமூ உடன் ஒப்பிடுகையில் டினமோ நெருக்கமானதாக இருந்தாலும் கூட ஈமூ பறவையைத் தேர்ந்தெடுப்பது சிறந்த முடிவாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஏனெனில் ஈமூ உயரம் 6 அடி 2 அங்குலங்கள் வரை உள்ளன. இவை டினமோவை விட மோவாவின் அளவுடன் நெருக்கமாக உள்ளது. அதேநேரம் மோவா முட்டைகள் ஈமூ முட்டைகளை விட மிகப் பெரியவை என்பதால் இது சிக்கலானதாகவே இருக்கிறது!












Click it and Unblock the Notifications